தமிழ் அறிவோம்! 167. கல்வியே அழியாச் செல்வம் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 167. கல்வியே அழியாச் செல்வம் ஆ.தி.பகலன்

 தமிழ் அறிவோம்!  167. கல்வியே அழியாச் செல்வம்  ஆ.தி.பகலன்



" கல்வியே அழியாச் செல்வம் "
 

எந்த இடத்திலும் நிலைத்து நிற்காமல் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு எப்போது வேண்டுமானாலும்  செல்வோம் என்பதே " செல்வம் " என்ற சொல்லுக்கான விளக்கமாகும். ஆக,  செல்வம் என்றால் நிலையற்றது என்பது உண்மையாகிறது. எல்லாவகை செல்வமும் நிலையற்றதுதான். ஆனால்,   இந்த உலகில் அழியாத செல்வம், நிலையான செல்வம் என்று ஒன்று உண்டென்றால் அது கல்விச் செல்வமே. "கல்வியே அழியாச் செல்வம் " என்பதை விளக்கும் பாடல் ஒன்றை இங்குக் காண்போம். 

" வெள்ளத்தால் அழியாது வெந்தழலால்

வேகாது வேந்த ராலும்

கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்

நிறைவன்றிக் குறைவு றாது

கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கோ

மிகஎளிது கல்வி யென்னும்

உள்ளத்தே பொருளிருக்கப் புறம்பாகப்

பொருள்தேடி யுழல்கின் றாரே " (விவேக சிந்தாமணி ) 

1. வெள்ளத்தால் அழியாது. 

நாம் ஈட்டிய பொருள்களையும் , செல்வங்களையும்   ஒருநாள் வெள்ளத்தால் அடித்து செல்லும் நிலை ஏற்படலாம். ஆனால், நாம் கற்ற கல்வியை எந்த லெள்ளத்தாலும் அடித்துச் செல்ல முடியாது. 

2. வெந்தழலால் வேகாது. 

எந்தவொரு பொருளையும் எரித்து சாம்பலாக்கும் தன்மை கொண்டது நெருப்பு. தீயால் நம் வீடு எரியலாம். நாம் படித்த புத்தகங்கள் கூட எரிந்து போகலாம். அந்தப் புத்தகங்களால் கற்ற கல்வியை ஒருபோதும் தீயால் எரிக்க முடியாது. 

3. வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது. 

உலகையே தன் படை வலிமையால் கைப்பற்ற  முடிந்த அரசனால் கூட ஒருவனுக்குள் இருக்கும் கல்வியறிவைக் கைப்பற்ற முடியாது. 

4. கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது. 

நம்மிடம் உள்ள பொன்னையோ,  பொருளையோ மற்றவர்களுக்கு நாம்  கொடுக்க கொடுக்க ஒருநாள் அது குறைந்து போகும். ஆனால்,  கல்வியறிவு மட்டும் ஒருநாளும் குறையாது. மற்றவர்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க, கற்றுக் கொடுக்க அது மேலும் மேலும் வளரும். 

5. கள்ளர்க்கோ பயமில்லை. 

வழிப்பறி செய்பவர்களோ , வீட்டில் வந்து திருடுபவர்களோ  கூட நம்மிடம் உள்ள பணத்தையோ, நகைகளையோ, விலையுயர்ந்த பொருட்களையோ திருடிச் செல்லலாம். ஆனால்,  நாம் கற்றக்கல்வியை யாராலும் திருட முடியாது.

 6. காவலுக்கோ மிக எளிது. 

நாம் ஈட்டிய விலைமதிப்பற்ற செல்வங்களை எல்லாம் வீட்டிலோ,  வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்திலோ வைத்து பாதுகாக்கிறோம். பல அடுக்கு பாதுகாப்பு இருந்தாலும் சில நேரங்களில் அவை கொள்ளை போகின்றன. நம்  செல்வங்களை எல்லாம்  "பொன் காக்கும் பூதம் போல " காலமெல்லாம் நாம் காக்க வேண்டியுள்ளது. ஆனால்,  விலைமதிப்பற்ற செல்வமாகிய நம் கற்ற கல்வியைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை காப்பது மிகமிக எளிது.  

இத்தனை சிறப்புமிக்க கல்வி என்னும் அழியாச் செல்வம் நம் உள்ளத்தில் இருக்கிறது. அதன் அருமைகளை உணர்ந்து அதைப் போற்றிப் பாதுகாக்காமல்,  அழியக் கூடிய செல்வமாகிய பொருட்செல்வத்தைத் தேடி உலகெங்கும் அலைவது ஏன்?

 புத்தியுள்ளவன்

புத்தகங்களைத் தேடுவான்!

புத்தியில்லாதவன்

பொன், பொருளைத்தான் தேடுவான்!

படிப்பு, படிப்பு, படிப்பு

அதுவே உங்கள்

நாடித் துடிப்பாக இருக்கட்டும்!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 


0 Response to " தமிழ் அறிவோம்! 167. கல்வியே அழியாச் செல்வம் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel