#கொல்லிமலை #இன்பச்சுற்றுலா.... அக்டோபர் 11, 12 & 13 – 2024 #மயிலம்இளமுருகு #Nature_love #Kolli_Hills


#கொல்லிமலை #இன்பச்சுற்றுலா.... அக்டோபர் 11.12,13
– 2024
#மயிலம்இளமுருகு
#Nature_love #Kolli_Hills
#இயற்கை_அழகு_கொல்லிமலை
இயற்கையின் அழகை அவ்வப்போது ரசிப்பதும் கொண்டாடுவது என்பதும் வாழ்க்கைக்கு மிகத் தேவையான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் குறிப்பிட்ட இடைவேளையில் இப்படியான பயணங்களை நாங்கள் மேற்கொள்ளுவது வழக்கம். பயணம் என்பது ஒரு புதிய உத்வேகத்தையும் புதிய புரிதலையும் புதிய அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் தரும் ஒன்றாக எப்போதுமே இருந்து கொண்டு வருகின்றது. நாங்கள் இந்த ஆண்டு காலாண்டு விடுமுறையில் செல்ல முடியாத சூழலில் இருந்தோம். எனவே விஜயதசமி , சரஸ்வதி பூஜை ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்ததால் நாங்கள் குடும்பத்தோடு கொல்லிமலைக்குச் சென்றோம். நாங்கள் எதிர்பார்த்தது போன்று மிகச் சிறப்பான பயணமாக அமைந்தது. மூன்று நாட்கள் அங்கே இருந்தது ஒரு புதிய தருணமாக அமைந்தது.
சுற்றிலும் மலைகளும் பசுமையான மரங்களும் செடிகளும் தாவரங்களும் என்று அங்கே எங்கள் கண்ணில் பட்டன. மிளகுக் கொடிகளும் காட்டில் இருக்கக்கூடிய அனைத்து மரங்களும் அங்கே இருக்கின்றன. மலையும் அருவியும் எப்போதும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொண்டே வருகின்றன. அந்த வகையில் அங்கு இருக்கின்ற இயற்கையை ரசிக்க நாங்கள் ஆயத்தமானோம். முதல் நாள் பயணத்தோடு இரவு அறையில் தங்கினோம். இங்கே அனைவருக்குமான அறைகள் இருக்கின்றன. ஆனால் நாம் முன்பே முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது. குறிப்பாக உயர்ந்த தரத்தில் அமைந்த நவீன வசதிகளோடு கூடிய Resorts and Retreat மற்றும் அரசாங்க விடுதிகளும் இங்கே இருக்கின்றன. உங்கள் வசதிக்கு ஏற்ப முன்பதிவு செய்துவிட்டு செல்வது சாலச் சிறந்தது. . அடுத்த நாள் காலை அறப்பளீஸ்வரர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தோம்.
பிறகு சிற்றருவியில் சிறிது நேரம் குளித்தோம். இங்கே பிரபலமான ஆகாய கங்கை என்று சொல்லப்படுகின்ற அருவிக்குச் செல்ல முடிவெடுத்தோம். இங்கு செல்ல ஒருவருக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றார்கள். கட்டணத்தைச் செலுத்தி விட்டு கீழே இறங்க ஆரம்பித்தோம். 1192 படிக்கட்டுகள் கீழ் நோக்கி அதாவது பள்ளத்தாக்கை நோக்கி ஒரு கிலோ மீட்டருக்கு மேலும் செல்லத் தொடங்கினோம் . சரியாக 30 நிமிடங்களில் நாங்கள் அருவிக்குச் சென்றடைந்தோம். நாங்கள் சென்ற காலம் பருவ காலம் என்பதால் அருவியிலிருந்து தண்ணீர் பயங்கர சத்தத்தோடு நாங்கள் எதிர்பாக்காத வகையில் கொட்டிக் கொண்டே இருந்தது. வியப்பாக இருந்தது. 300 அடிக்கு மேலே இருந்து கீழே தண்ணீர் கொட்டுவதைப் பார்க்கும் போது சொல்லவும் வேண்டுமா என்ன?. அருவியின் அருகில் செல்வது கூட எங்களால் முடியவில்லை. அருவியில் இருந்து கொட்டுகின்ற தண்ணீர் எங்கள் மீது பட்டு நாங்கள் முழுமையாக நனைந்தோம் . பேர் இரைச்சல், அவ்வளவு சாரல், காற்றோடு சேர்ந்த மழை நீர் போன்று அருவியின் நீர்ச்சாரல் அடித்துக் கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அங்கே செலவு செய்தோம். பிறகு மெல்ல மேலே ஏற ஆரம்பித்தோம். ஏறுவது என்பது குறிப்பாக ஆடவர்கள் ஏறி விடலாம். ஆனால் பெண்கள் கொஞ்சம் ஏறுவது கடினமாக இருந்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக நாங்கள் ஏறுவதற்கு எடுத்துக் கொண்டோம். மிகச்சிறந்த ஒரு அருவியில் குளித்த அனுபவம் சிறப்பாக இருந்தது. ஆகாய கங்கையை அனுபவித்து விட்டு நாங்கள் எங்கள் அறைக்கு வந்தோம்.
சிற்றுண்டியை முடித்தோம். வந்த பிறகு திரும்பவும் கொல்லிமலையில் விளைகின்ற பொருட்களை வாங்குவதற்காக சிவன் கோயில் அருகில் சென்றோம். அங்கே பழங்குடியினர் இயற்கை அங்காடியில் எங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு நாங்கள் அறைக்கு வந்தோம் . மீதம் இருக்கின்ற பகுதிகளைப் பார்க்க ஆயத்தமானோம். அப்படியாக நான்காவது பகுதியாக நாங்கள் சென்றது மாசிலா அருவி ஆகும் . சிவன் கோவிலிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இந்த அருவி இருக்கின்றது. அங்கே உள்ளே செல்வதற்கு ஒருவருக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றார்கள். ஆனால் தேவையான மிக அனுபவிக்க வேண்டிய இடமாக மாசிலா அருவியும் இருக்கின்றது. ஆகாய கங்கையின் அருகில் எங்களால் நெருங்க முடியவில்லை. ஆனால் மாசிலா அருவியில் அருகில் சென்று அழகாக ஆனந்தமாக குளிக்க வழிவகை இருப்பதை உணர்ந்து அனைவரும் ஆனந்தமாய் நீராடினோம். வாகனத்தை விட்டு விட்டு நடையாக நடந்து 250 மீட்டர் செல்ல வேண்டும். அங்கே அழகான நீர்வீழ்ச்சி நம்மை அரவணைக்கின்றது.
பிறகு நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு நம்ம அருவி என்ற அருவிக்குச் சென்றோம். அங்கே ஒருவருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றார்கள். மிக எளிதில் அணுகக்கூடிய அருவியாக இந்த அருவி இருக்கின்றது. அதனால் என்னவோ நம்ம அருவி என்று இந்த அருவிக்குப் பெயர் வந்துள்ளது. மிகவும் ஆனந்தமான குளியலை நாங்கள் அங்கே போட்டோம். அடுத்ததாக நாங்கள் எட்டுக்கை அம்மன் கோவிலுக்குச் சென்றோம். கொல்லிமலையில் இக்கோயில் முக்கியமான கோயிலாக இருக்கின்றது. வாகனத்திற்குக் கட்டணமாக 40 ரூபாய் வசூலிக்கின்றார்கள். அடுத்ததாக நாங்கள் பழங்குடியினர் பழச்சந்தை என்ற சோளக்காடு பகுதிக்குச் சென்றோம். இங்கு இப்பகுதியில் விளைகின்ற அனைத்து பொருட்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. மேலும் பழச்சந்தை சிறப்பான சந்தையாக இருக்கின்றது. பழச்சந்தையின் உள்ளே சென்று விட்டு எங்களுக்குத் தேவையான பல பழங்களை வாங்கிக் கொண்டு , நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். சோளக்காட்டிலிருந்து ஆறு கிலோமீட்டர் வந்தால் செம்மேடு என்ற இடத்தில் நாங்கள் இரவு தங்கினோம்.
மறுநாள் காலை சீக்குப்பாறை என்ற அந்த மலைகளின் இயற்கையை ரசிக்க Viewpoint ற்கும் சென்றோம். அங்கே ஒருவருக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. நாங்கள் சென்ற நேரம் சாரலோடு சேர்ந்த மழையாக இருந்த காரணத்தால் அழகான அந்த இயற்கை சூழ்ந்த மலைகளைப் பார்க்க இயலவில்லை. ஆனால் சாரல் மழையில் அழகாக , இன்பமாக நனைந்தோம். தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் போன்றவற்றைக் கண்டு களித்தோம். செம்மேட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சீக்குப்பாறை காட்சி முனை இருக்கிறது . அடுத்ததாக 3 கிலோ மீட்டர் தொலைவில் தாவரவியல் பூங்கா மற்றும் படகு குழாம் என்பன இருக்கின்றன குழந்தைகள் பூங்காவும் குழந்தைகள் ரசிக்கத் தக்க வகையில் இருக்கின்றன. அடுத்ததாக மேற்கொண்டு சொல்ல வேண்டும் என்றால் சித்தர் குகை இருக்கின்றது. இங்கே சந்தான அருவி என்பதும் இருக்கின்றது. மாசி பெரியசாமி கோவில் என்பதும் இருக்கின்றது. நாங்கள் மாசி பெரியசாமி கோவிலுக்கு செல்லவில்லை. ஏனென்றால் 2 கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்று கூறிய காரணத்தால் அங்கே செல்லவில்லை. விருப்பம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்குச் செல்லலாம். மற்றபடி கிட்டத்தட்ட ஒரு 13 இடங்களை நாங்கள் பார்வையிட்டோம். .
ஆக மூன்றாம் நாள் காலை சில இடங்களைப் பார்த்துவிட்டு சென்னை நோக்கி எங்கள் பயணத்தை மேற்கொண்டோம். இரவு சரியாக 8:30 மணிக்கு நாங்கள் இருக்கின்ற எங்கள் வீட்டுக்கு வந்தோம். ஆக இந்த மூன்று நாளும் மிகச் சிறந்த ஒரு அனுபவமாகவும், இயற்கை சூழ்ந்த ஒரு பகுதியிலும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை அனுபவித்த மகிழ்ச்சியும் இருந்தது .... குறிப்பாக குழந்தைகள் புதிய அனுபவத்தை வழக்கம் போலவே பெற்றார்கள். இப்படியான பயணங்கள் நம்மை புத்துணர்ச்சியோடும் புதிய புரிதலையும் ஏற்படுத்தும் விதமாக அமைகின்றன. உங்களுக்கும் இப்படியான பயணங்கள் சிறப்பானதாக அமையட்டும். இவ்வாறு அடிக்கடி நாங்கள் மேற்கொள்ளும் பயணங்களில் பலவற்றைப் பெறுகின்றோம்... வாழ்க்கையின் புரிதல் மேலும் அதிகரிப்பதை நாங்கள் உணர்கின்றோம்... உங்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
கொல்லிமலையில் பார்க்க வேண்டிய இடங்கள்
1. அறப்பளீஸ்வரர் கோவில்
2. ஆகாயகங்கை அருவி
3. மாசிலா அருவி
4. சிற்றருவி
5. நம்ம அருவி
6. சந்தான அருவி
7. எட்டுக்கை அம்மன் கோவில்
8. சோளக்காடு - மசாலா பொருட்கள்,
9. பழங்குடியினர் பழச்சந்தை
10. சீக்குப்பாறை View பாயிண்ட்
11. மாசி பெரியசாமி கோவில்
12. தாவரவியல் பூங்கா
13. படகு இல்லம்
14. சித்தர் குகை
15. வயர்லெஸ் பாயிண்ட்
0 Response to "#கொல்லிமலை #இன்பச்சுற்றுலா.... அக்டோபர் 11, 12 & 13 – 2024 #மயிலம்இளமுருகு #Nature_love #Kolli_Hills"
Post a Comment