31.5 .2026 அன்று மயிலத்தில் 2001 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்த மாணவ நண்பர்கள் 25 ஆண்டுகள் கழித்து மயிலத்தில் சந்திப்பை நிகழ்த்தினர். சந்திப்பில் உடன் பயின்ற 23 நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 6 நபர்கள் என 29 நபர்கள் சந்தித்து தங்களது கல்லூரிக் கால நினைவைப் பகிர்ந்து கொண்டனர். தற்போது இருக்கின்ற சூழலில் தங்களது நிலைப்பாட்டையும் ஆண்டிற்கு ஒரு முறையாவது எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற அன்பின் புரிதலையும் உணர்ந்து அனைவரும் உரையாடினர்.
தோற்றத்தில் 45 ஆண்டுகள் ஆனாலும் உள்ளம் என்னவோ 20 வயதிலேயே தள்ளாடியது. அப்போது படித்தபோது பார்த்த உருவங்கள் கண் முன்னே தோன்றின. இப்போது இருக்கின்ற புரிதல் தங்களது தெளிவையும் காண முடிந்தது . தூரத்தில் இருந்தாலும் எப்படியாவது வந்து நண்பர்களைச சந்தித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தினால் வெகு தொலைவில் இருந்து வந்து இந்நிகழ்வில் பங்கேற்றுக் கொள்ள இவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருந்து வழி அனுப்பி வைத்ததை நன்றியுடன் நாங்கள் பாராட்டுகின்றோம்.
புதுச்சேரியிலிருந்து மலர்க்கொடி மற்றும் கனகராணி அவர்களும் பெங்களூரிலிருந்து வந்த ப்ரீத்தி அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர். நாமக்கலிருந்து அனிதா அவர்களும் சேலத்திலிருந்து முத்துநகை அவர்களும் வந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். மேலும் சென்னையில் இருந்து 9 நபர்கள் வந்து தங்களது அன்பினை வெளிப்படுத்தினர் .குறிப்பாக மயிலத்தில் வசிக்கும் சுகந்தி அவர்கள் தங்களது வீட்டுக்குத்தான் முதன்முதலில் வரவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார்.
அதன்படியே அனைத்து நண்பர்களும் காலையில் அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டு கூழ் உணவைக் குடித்து விட்டு மற்றும் விதவிதமான உணவுகளை உண்டு மகிழ்ந்தோம். தெய்வ சிகாமணி அவர்களும் தேவையான வடை போன்ற உணவுகளைக் கொண்டு வந்து கொடுத்தார். நேரமாக ஆக அனைத்து நண்பர்களும் ஒன்று கூடினோம். நாங்கள் படித்தபோது எங்களது கல்லூரி முதல்வர் முனைவர் சு. திருநாவுக்கரசு ஐயா அவர்களின் மகள் தி.அருண் மொழிச்செல்வி அவர்கள் தங்கள் வீட்டில் தன் தந்தையின் நான்காம் ஆண்டு நினைவு நாளை போற்றிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் அனைவரும் அவரது இல்லத்திற்குச் சென்று ஐயா அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னால் வழிபாடு செய்து வணங்கினோம் .
மேலும் அவரது பாடம் எடுக்கும் திறன் , குரல் வளம், மனிதநேய பண்பு , அன்பு எனப் பலவற்றை அவர்களின் குடும்ப உறுப்பினர்களோடு பகிர்ந்து கொண்டோம். பேராசிரியர் சிவக்குமார் ஐயா அவர்களும் முன்னாள் முதல்வர் அவர்களைக் குறித்து பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவை சிறப்பான உணர்வை ஏற்படுத்தியது. அவர் ஐயா அவர்கள் குறித்து எழுதியுள்ள சிறு நூலை எங்கள் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார். பிறகு நாங்கள் அனைவரும் மயிலம் முருகனை தரிசிக்க கிளம்பினோம். 12 மணி அளவில் முருகனை மிக அருகில் இருந்து அனைவரும் வணங்கி மகிழ்ந்தோம் .
பிறகு நாங்கள் ஏற்கனவே முடிவு செய்த இடத்திற்கு வந்து தங்களைக் குறித்தும் தங்களது வாழ்க்கை முறை , சமுதாயம், அன்பு, கல்வி எனப் பலவற்றை பற்றி அனைத்து நண்பர்களும் பரிமாறிக் கொண்டோம். அனைவரின் கள்ளம் கபடமற்ற உள்ளத்தைப் பார்த்து, கேட்டு ரசித்தனர். சிறு சிறு விளையாட்டுகள் மூலமாக அனைவரும் மீண்டும் மாணவப் பருவத்திற்கே சென்ற நிலையை உணர்ந்தோம். மிகவும் மகிழ்வான நெகிழ்வான தருணங்களாக அன்றைய நாள் இருந்தது. பிறகு குழு புகைப்படம் எடுத்து, அதனை அச்சுப் பிரதியாக அந்த புகைப்படத்தை அனைவரிடமும் ஒப்படைத்த போது அவர்களின் கண்களில் மகிழ்ச்சியைக் கண்டோம்.
மயிலம் கல்லூரியில் பயின்ற இடத்திற்குச் சென்று தற்போதைய முதல்வர் திருநாவுக்கரசு ஐயா அவர்களைப் பார்த்து உரையாடினோம் . பிறகு அனைவரும் குழுபுகைப்படம் எடுத்துக்கொண்டோம். கல்லூரியில் தாங்கள் படித்த இடங்களுக்குச் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். தாம் படித்த அந்த இடங்களுக்குச் சென்று மீண்டும் அந்த பழைய 2001 ஆம் ஆண்டுக்குப் பயணம் செய்ததை உணர முடிந்தது. தேநீர் அருந்திவிட்டு ஐந்து மணிக்கு அனைவரும் கலையலாம் என்றும் அவரவர் இல்லத்திற்குச் செல்லலாம் என்று முடிவு எடுத்தோம்.
சிறிது சிறிதாக ஒருவர் ஒருவராக பிரிய மனமில்லாமல், அடுத்த சந்திப்பு எப்போது நிகழும் என்ற ஏக்கத்துடனே நண்பர்கள் அனைவரும் கலைந்து செல்வதைப் பார்க்க முடிந்தது. இறுதியில் அவரவர்கள் தங்கள் இருப்பிடத்திற்குச் சென்று நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம் என்ற செய்தியைக் குழுவில் பதிவு செய்தனர். அனைவரின் பாதுகாப்பையும் அறிந்து மகிழ்ந்தோம். திரும்பவும் எப்போது இத்தகைய சந்திப்பு நிகழும் என்ற ஆர்வத்துடனே நண்பர்கள் அனைவரும் இருப்பதை அவர்களின் பதிவுகள் வழியாக காண முடிகின்றன. காலங்கள் கரைந்தாலும் நட்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சந்திப்பு உறுதி செய்துள்ளது. தொடர்ந்து அதே அன்போடும் நட்போடும் பயணிப்போம் வாருங்கள்... நன்றி..
நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர்கள்
1.பாலா
2.கிரேஸி
3.ஜெய் கணேஷ்
4. சிவசங்கரி
5.கலைவாணி
6.ஜெயபரமேஸ்வரி
7.சுந்தரி
8.சுகந்தி
9.தமிழரசி
10.அனிதா
11.கனகராணி
12.அருண்மொழிச்செல்வி
13. அபிராமி.
14. தெய்வசிகாமணி
15. பானு
16. விஜயா
17. விஜயலட்சுமி
18. மலர்க்கொடி
19. சுபாஷிணி
20. ப்ரீத்தி
21. நந்தினி
22. கெஜலட்சுமி
23. முத்துநகை
24. மோகனா
மயிலம் இளமுருகு






























0 Response to "25 ஆண்டுகால நட்பு - 31.05.2026 சந்திப்பை நிகழ்த்திய மயிலம் தமிழ்க் கல்லூரி மாணவர்கள்... "
Post a Comment