காலத்தின் கட்டாய வாசிப்பு - இது எங்கள் வகுப்பறை - வே.சசிகலா உதயகுமார், நூல் மதிப்புரை- மயிலம் இளமுருகு


வந்தவாசியில்
உள்ள சன்னதி நிதியுதவிப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் வே.சசிகலா உதயகுமார் அவர்கள் வழக்கமான கற்பித்தல் முறையில் சிலமாற்றங்களையும், மாணவர்கள் பங்கேற்பு, வகுப்பறைச் சூழலை மாற்றியமைத்தல், ஆர்வத்தைத் தூண்டல் எனப் பள்ளியில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் உதவியுடன் பல்வேறு செயல்பாடுகளைப் பயன்படுத்தி வெற்றி
கண்டுள்ளார். தான் பணியாற்றும் பள்ளியில் செய்த அனுபவங்களை
முகநூலில் பகிர்ந்து கொண்டு வந்திருந்தார். முகநூலில் பதிவிட்டு வரும் காலத்தில் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள் போன்றோர்களால் விரும்பிக் கவனிக்கப்பட்ட பதிவாக
இவருடைய பதிவுகள் இருந்துள்ளன. இதன் தொடர்ச்சியாகப் பேரா.ச.மாடசாமி அவர்கள் வழிகாட்டுதலோடு, எழுத்தாளர் கமலாலயன் அவர்களின் செம்மைபடுத்தலோடு, கலைச்செல்வன், முத்தையா வெள்ளையன், இரத்தின விஜயன், மதுரைசிவா, பாரதி புத்தகாலயம் தோழர் நாகராஜன் போன்றோர்களின்
உதவியோடு வெளிவந்துள்ள நூலே “ இது எங்கள் வகுப்பறை’’ என்ற
நூலாகும். தற்காலக் கல்வி, மாணவர்கள் - ஆசிரியர்கள் உறவு, கற்பித்தல் முறையிலான வெளி, தளம் எனப் பலவற்றிலும் இந்நூல் உரிய கவனம்
பெறுகிறது.
ஆண்டு
துவக்கம் முதல் இறுதிவரை ஆசிரியரின் வகுப்பறையில் பயணம் செய்த அனுபவத்தை
இப்புத்தகம் நமக்குத் தருகின்றது. பதட்டம், மகிழ்ச்சி, வளர்ச்சி, கற்றல் அடைவு, சமூகப்பிரக்ஞை, இயற்கை ஆர்வம் எனப் பலவற்றைத் தன் மாணவர்களுக்கு
அனுபவத்தின் மூலமாக விதைத்துள்ள ஆசிரியரின் அரிய ஆர்வ உழைப்பு பாராட்டப்பட
வேண்டியது. இந்நூலைப் படிப்பவர்கள் தன்னுள்ளும் மாற்றங்களை
உணர்வர். சிலவற்றைப் பின்பற்றவும் செய்வர் என்பது உறுதி.
இந்நூலில்
ஆசிரியரின் செயல்பாடு, கல்வி, மாணவர்களின் வெளிப்பாடுகள் என மொத்தம் 82 தலைப்புகளின் வழியாக உரிய புகைப்படத்தோடு நூலாக்கம் பெற்றுள்ளது. நூலாசிரியர் அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் நூலாக்கித் தந்துள்ளார். பேச்சு நடை, எழுத்து நடை எனப் பலவிதத்தில் அருமையாக நம்முடன்
பயணிக்கிறது இப்புத்தகம்.
பேரா.ச.மாடசாமி அவர்களின் அணிந்துரை படிப்பவரை
வழிப்படுத்துவதாகவும், ஆர்வம் ஏற்படுத்துவதாகவும், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமெனக் குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும்
அருமையாக உள்ளது. உடைபடும் சத்தங்களை வழக்கமான முறையில் கொடுத்துள்ள
முறை எண்ணுதற்குரியது. எதையெல்லாம் குறிப்பிட வேண்டுமோ அதனைக் குறிப்பட்டு
படிப்பவருக்கு வழி அமைத்துத் தந்துள்ள விதம் அருமை. முன்னுரையில் ஆசிரியர் சசிகலா அவர்கள் நூல் தோன்றிய
காரணம், அதற்கு உறுதுணையாக இருந்துள்ளவர்களுக்கு நன்றி
கூறியுள்ளார். குடும்பத்திற்கும் மரியாதை கொடுத்துள்ளமையை நாம்
பார்க்க முடிகின்றது.
தான் பணியாற்றும் பள்ளி குறித்துத் தன் வரலாறு
கூறும் முறையில் நமக்கு அறிமுகம் செய்துவைக்கின்றார். தான் பணியேற்கும்போது தன் முன்னுள்ள சவால்கள்
என்னவென்று தெரிந்து வைத்துள்ளார் ஆசிரியர். சன்னதிப் பள்ளியில் படித்தது, ஆசிரியரானது எனத் தன்னுடைய வாழ்க்கையைச் சொல்லி ஒரு மாணவி, எப்படி ஆசிரியரானார் எனப் பள்ளிப்பருவ நிலைகள், தன்னுடைய ஆசிரியர்களின் பெயர்பட்டியலைத் தந்து
நினைவுபடுத்தி நன்றியும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளியில் பணியேற்ற நாளின் நிகழ்வுகளை அப்படியே நம்
கண்முன்னே கொண்டு வருகிறார்.( பக் 21) தனக்குப் பாடமெடுத்த ஆசிரியருடன் தானும் சக
ஆசிரியராகப் பணிபுரிகின்ற நிலையை நினைத்துப் பெருமையாகப் பேசிச் சென்றுள்ளார். தான்பட்டதுன்பத்தைத் தன் மாணவர்கள் அடையக்கூடாது என உறுதிமொழி, தற்போதைய கல்விசார் சவால்கள் என அனைத்திலும் நேர்மையோடு இருந்துள்ளமை அருமை.
மாணவர்களிடத்து ஓவியம், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றைக்
கற்பித்தலில் சொல்லிக்கொடுத்துள்ளார். குழந்தைகளைச் சில சமயங்களில் கண்டித்தாலும், அன்போடு அரவணைத்த விதம், மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க எடுத்த முயற்சிகள், பெற்றோர் உடனான நட்பு எனப் பலவற்றை இப்புத்தகம் பேசிச் செல்கிறது. ஆசிரியர் சிவா ஒருங்கிணைத்த கலகல வகுப்பறை ஏற்படுத்திய பன்முகப்பயிற்சியால்
பலன்பெற்று அதனை மாணவர்களிடத்து விதைத்துள்ளார். காலவோட்டத்தில் எல்லாம் மாறிய சூழலில்
குழந்தைகளிடத்து மட்டும் கற்பித்தலில் ஒரே தொனி, அதே வார்த்தைகள் என மாற்றமில்லாமல் இருத்தல் வேதனை
அளிப்பதாக உள்ளது என்கிறார்.
தன் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியும், பயிற்சியின் பலனாவது தன் மாணவர்களுக்காக மட்டுமே என எடுத்துரைத்துள்ளார். மனதளவிலும் பயிற்சி பெறல், புரிதல் என ஆசிரியர்கள் மாற வேண்டிய நிலையை
வெளிப்படுத்தியுள்ளார். திட்டமிடலில் தன்னை மாற்றிக் கொண்டு செயல்படத்
தொடங்கி உள்ளமை அருமை. கல்வி ஆண்டின் முதல் நாள் தயக்கம், பணி, செயல்பாடுகள், கதை கூறும் வகையில் பேச்சு வழக்கு என 54 மாணவர்களின் நிலையில் மாற்றம், மாற்றம் தன்னளவில் நிகழவேண்டுமெனக் கூறியது
எண்ணத்தக்கது.
குழந்தைகள் வணக்கம் செலுத்தும் பழக்கத்திலும்
மாற்றத்தை ஏற்படுத்தி ஹேப்பி மார்னிங், ஆப்டர்நூன், ஈவனிங் என முறைப்படுத்தியவிதம், மாணவர்களின் பேச்சு, சிரிப்பு, நகைச்சுவை போன்றவற்றை இந்நூல் நமக்குத் தருகிறது. விட்டுப்போன வீட்டுப்பாடம் என்னும் பகுதியில் ஆதி என்ற மாணவன் சொன்ன கதை, அருமை என இப்படி மாணவர்களைப் பேச வைத்தும், அவர்களின் மன விருப்பப்படி அவரவர்க்கான திறன்களை
வளர்க்கச் செயல்படுவது சிறப்பு.
பாடப்பொருள் சார்ந்த வீட்டுப்பாடம், அதனுள் மாணவர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய பள்ளிக்கு லிங்கராஜ் என்பவர் செய்து கொடுத்த கணினி மையக்கல்வி (ஸ்மார்ட் கிளாஸ் )பயன்படுத்திய விதம், உதவியருக்கு நன்றி கூறியமை, கதையும் நானே, முடிவும் நானே என்பதில் மாணவர்களை ஒருங்கிணைத்த
விதம், ஈடுபட வாய்ப்பளித்தல், மற்றும் அனைவரையும் உற்றுநோக்கி ஒதுங்கி இருக்கும்
மாணவர்களையும் பங்கேற்க வாய்ப்பு தருவது முக்கியத்துவம் பெறுகிறது.
மாணவர்களைப்
பாராட்டினால் மற்றவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் என்பது வெளிப்படை. ரகு செய்த களிமண் டைனோசர் என்னும் பகுதி சிறப்பு. வீட்டுப்பாட முறையில் மாற்றம், ஆர்வத்தைத் தூண்டல், குழுக்கள் பிரித்தலின் அவசியம், செயல்பாடுகள், கதைகட்டு நிகழ்ச்சி, தன் சக ஆசிரியர்களுடன் ஒத்துழைப்பு, கதை எழுதப் பயிற்சி கொடுத்துக் கற்பனை வளத்தைத் தூண்டிய விதம், தளிர்த்திறன் திட்டத்தில் பெற்ற வித்தியாசமான விளையாட்டு, இப்படியாக விளையாட்டிற்கே முக்கிய இடம் கொடுத்து மாணவர்களைக்
குஷிப்படுத்தியுள்ளார்.
பச்சைக்கிளி
செத்துப்போச்சே விளையாட்டின் புரிதல், விளையாட்டின் மூலம் கற்பித்தலைத் தன்
வசமாக்கியுள்ளார் ஆசிரியர். தமிழ், ஆங்கில மொழிப்படங்களைக் கற்பிக்கும் முறையிலும்
மாற்றம், புரிதலை ஏற்படுத்துவது, தனக்குச் சில பயிற்சிகள் வெறுப்பைத் தருவதாகவும், அதாவது தன் குழந்தைகளிடம் இருந்து பிரிக்கிறதே என வருத்தமுற்று இருந்த
சூழலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இயல்பாகவே ஏதாவது ஒன்றில் ஈடுபடுவர்
என்று விளையாட்டை வகுப்பறைக்கும் கொண்டு வந்தது, அதில் அனைவரையும் பங்கேற்க ஆயத்தப்படுத்தியமை அழகு.
பம்பரம் விடமுயன்று பல்பு வாங்கியது, தனக்கு வருத்தம் இருந்தாலும் மாணவர்களின் இன்பங்களையும் வெளிப்படையாகக்
குறிப்பிடுகிறார். எதனைச் செய்தாலும் உடன்பாட்டு முறையில் அணுகி, குழந்தைகளை உற்சாகப்படுத்தியது, உற்சாகப்படுத்துவது அருமை. ஆசியர்களை மாணவர்கள், ‘எல்லாம் அறிந்தவர்களாகவே’ கருதுகின்றனர். எது கல்வி எனப் புரியவைத்தல், வினையையும் (VERB) விளையாட்டாய்க் கற்பிக்கும் முறை, கற்கும் முறையைத் தெளிவுபடுத்துகின்றது இந்நூல். பல்வேறு சொற்களை அறிதல், பயன்பாடு, செயல்களில், அனுபவங்களின் மூலமாகக் கற்றல், அனுபவங்களைப் பெறுவதின் அவசியத்தைக் குறிப்பிட்டுள்ளமை நன்று. பாடத்தலைப்பிற்கேற்ப ஒரு நிகழுவை செயல்படுத்திப் பிறகு பாடப்பொருள்
விளக்குவது குறிப்பிடப்பட வேண்டியதாக உள்ளது.
புதிய
செயல்பாடுகளை வளர்க்கும் திறனை மேம்படுத்தும் பயிற்சி, மாணவர்கள் செய்யும் படைப்புகளை மதித்துப்
பாராட்டுதல், நெருப்பில்லாமல் சமைக்கும் விதம், உணவுத்திருவிழா, இதற்கு உதவி செய்த ஆசிரியர்களுக்கு நன்றியுணர்வோடு
நன்றி செலுத்தியது எனப் பலதிறப்பட்ட செய்திகளை இந்நூல் வழி அறிகிறோம். மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் சன்னதி பள்ளியில்தான்
படிப்பேன் எனக் கூறியது இவருடைய ஆசிரியப்பணியின் சிறப்பினைக் காட்டுவதாகவே உள்ளது.
பட்டாசு
வெடிப்பதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்க நாடகம் நடத்துவதன் மூலம்
விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் ஆசிரியர். பெற்றோர்களுடன் உரையாடல் என நல்ல புரிதல் கொண்ட
செய்தியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கதைத்திருவிழாப்பகுதி நம்மை அந்நிகழ்விற்கு
அழைத்துச் செல்கிறது. புதிய சிந்தனை, அதன் செயல் வடிவம் என்பவை அழகு.. 191 மாணவர்களுக்கும் கோமாளி குல்லா செய்வது, கதைத்திருவிழாவில் பங்கேற்றவர்களைத் தினமும்
வரச்சொல்லுங்கள் என்று மாணவர்கள் சொல்லியிருப்பதின் மூலம் அதில்
பங்கெடுத்தவர்களின் நேர்த்தியை அறிந்து கொள்ள முடிகின்றது.
படைப்புத்திறனை வளர்த்தல், முட்டை ஓட்டில் கோமாளி செய்தல், புதிய கற்பித்தல் முறையோடு கூறினால் ஏற்படும்
மனவெழுச்சி எனக் கற்றலை அழகுபடுத்துவது அருமை. சிறுவர் விளையாட்டுகளை அறிந்து அதனைச்
செயல்படுத்துதல், பல்லாங்குழி பெயர்க்காரணம், சொல்விளக்கம், மாணவர்களின் ஆர்வத்திற்கு விளக்கம் தருதல், வகுப்பறை நூலகம் அமைத்தல் மாணவர்களுக்கு வாசிக்கக் கற்றுத்தருதல், ஊஞ்சல் இதழை அறிமுகம் செய்து, அவர்களுக்குப் பிடித்தமானவற்றைச் செய்யச் சொல்லல். மாணவர்களின் செயலை அறிந்து மகிழ்ச்சி அடைதல், தான் செய்யப் பிறகு மாணவர்களைச் செய்யச் சொல்லி
வழிப்படுத்துவதையும் காண்கிறோம்.
கதைகளின்
மூலமாகக் கற்பனைத்திறனை வளர்த்தல். சொற்களுக்கான பொருள் விளக்கத்தை அறியச்செய்வதில்
புதிய அணுகுமுறையைக் காண முடிகின்றது. நகைச்சுவை, சொல் விளையாட்டு நிகழ்த்திக் கற்றல் திறனைப்பெற
வைத்துள்ளமை சிறப்பு. செயல்பாட்டில் மாணவர்கள் அனைவரும் பங்கேற்க முயற்சி
மேற்கொண்டுள்ளமையை அறிகிறோம். குழந்தையை நல்ல பழக்கத்திற்குக் கொண்டு வர உளவியல்
ரீதியாகக் கதை வடிவில் குழந்தைகளின் மொழியில் சொல்லி, சூழலை (ஜட்டி போட வேண்டிய அவசியம்) புரிய வைத்து வாழ்க்கை கல்வியையும் கற்பித்துள்ளார் ஆசிரியர்.
குழந்தைகள்
மீது அக்கறை கொண்டவராக இருக்கும் நிலை, கற்றலில் தன் உழைப்பு சென்று சேரவில்லை என்ற போது
கோபப்படுகின்றார். ஆனால் அந்தக் கோபம் சிறிது நேரம் மட்டுமே. குழந்தைகள் பேசுவதை ரசித்துக் கேட்டு அகம் மகிழ்கின்றார். ரோஷனின் அம்மாவை வரவைப்பது அவர்களின் மூலமாக இயற்கை, மருத்துவம், உணவு போன்றவைகளுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தும்முறை ஆகச்சிறப்பு. ஒவ்வொன்றையும் பதிவு செய்ய வேண்டிய அவசியம்
குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகள் தவறு செய்யும் போது கண்டிப்பாக
இருப்பதும், நேர்மையாக இருக்கும் போது பாராட்டுவது
குறிப்பிடத்தக்கது.
இலக்கணக் கற்றலை மாணவர்கள் புரிந்து கொள்ளும் நோக்கில்
எடுத்துரைப்பது, பசுமை உலகம் பாடம் நடத்தும் போது செம்பருத்தியின்
சூலகத்தைப் பார்த்த மாணவர் “ பாம்பு ஊதுவாங்களே அது மாதிரி “இருக்கு என்பதையும் ரசித்தல், நாளாகத் நாளாக தானாகவே மாணவர்கள் செயல்பாடுகள் செய்கின்ற அளவிற்கு வளர்ச்சி
அடைகின்றனர். விதை மூலம் விருட்சம் வரை என்ற பகுதியில் இயற்கை விவசாயம், பற்றிய புரிதலும் அதனை உற்றுநோக்கி அனுபவக்கற்றலின் வழி அறிந்து செய்கின்ற
விதம் வரவேற்கத்தக்கது.
கதை வழி ஆங்கில இலக்கணம் கற்பித்தல், TENSE பாடம் நடத்திய விதம் எண்ணத்தக்கது. தோட்டம் அமைத்தல், மாணவர்கள் அதனைத் தினமும் நாட்குறிப்பேட்டில் எழுதி
வருவதின் மூலம் படைப்புத்திறனையும் பெறுகின்றனர். ’பொனடிக் ரயிலு’ செடி வளர்த்ததில் உள்ள கற்றல் அனுபவம் எனப் பலவற்றை இந்நூல் தருகிறது. மாணவர்களை உற்சாகப்படுத்தி ஆர்வமாகச் செயல்பட
வழிகாட்டியுள்ளார் ஆசிரியர். காய்கறிகளின் நன்மைகள் என்ற நாடகத்தையும்
நடத்தியுள்ளார். அனைத்து மாணவர்களையும் அங்கீகரித்துப் பாராட்டல், விழிப்புணர்வு உறுதிமொழி, அழகான வார்த்தைகளில், எண்ணங்கள் விருட்சமாகிய வரலாற்றினைப் படிப்பவர்
அறிந்து கொள்ள முடிகின்றன.
செடி
வளர்த்தல் மழை வந்ததினால் மாணவர் ஒருவர் இரவு தூங்காமல் இருந்த செய்தி, உண்மைநிலையை அவருடைய தந்தை கூறிய பின்னரே தூங்கினார் என்ற பதிவில்
மாணவர்களின் அக்கறையை அறிகிறோம். நேரடி அனுபவக்கற்றலால் புழு பட்டாம்பூச்சியாக வரும்
வரையிலான பதிவுகளை எழுதியிருப்பது சிறப்பு. தாவரவியல் பூங்காவை வகுப்பறையில் கொண்டு வருவது, களப்பணி முக்கியம் எனல், கல்விச்சுற்றுலாவின் பயன்கள் அளப்பரியது என
இப்பகுதியில் உணரமுடிகின்றது. குறைந்த பட்சம் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகதளத்தைப் பயன்படுத்தி அனுபவ முறையில்
கற்றலைக் கொடுத்தலின் அவசியம் தேவையானதாகின்றது.
பானையில் வார்லி ஓவியம், குழந்தைகளைப் பாராட்டுவதின் நோக்கம் அனுபவக்
கல்வியின் மூலம் பெருமிதம் அடைதல், ஒவ்வொன்றையும் உற்றுநோக்கிக் கற்றலின் அவசியம், குழந்தைகளின் மனநிலை, குடும்ப நிலையை அறிந்து அவர்களிடம் நடந்து
கொள்ளும்முறை கீரை குறித்த செயல்பாடுகள், ஆசிரியர் எப்போது வருவார் என்று காத்திருக்கும்
சூழலை விவரித்தல், இப்பதிவின் மூலமாக ஆசிரியரின் கற்பித்தல் ஈடுபாடு, குழந்தைகளின் அன்பையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
தனக்கு
உதவி செய்த நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு நன்றி கூறும் பண்பு, எழுதக்ாமல் இருக்கும் மாணவர்களுக்கு எழுத கற்றுக்கொடுத்தல், பாராட்டுதல், தன்னுடன் வந்த நாய்க்குட்டியை நினைத்து அழும்
மாணவரின் அன்பைப் புரிந்து தீர்வு காணும் விதம், சிறுகதை படிப்பது போன்ற உணர்வைச் சில பதிவுகள் ஏற்படுத்துகின்றன. கூல்ரிங்ஸ் என்று நினைத்து ஆலாவைக் குடித்த குழந்தையின் வீட்டிற்கே சென்று விசாரித்துப்
பள்ளிக்கு அழைத்து வரும் அக்கறை, இப்பகுதி கண்ட பாட்டில்களில் எதையாவது வைப்பது
தவறென்று கட்டுரைக்கின்றது. ஜூ- ஜூ க்கு கடிதம் எழுததல், மாணவர்கள், கடிதத்தின் மூலமாகத் தங்களுடைய இன்பத் துன்பங்களை
வெளிப்படையாக எழுதினர். அதனை மொத்தமாக மதுரை சிவா ஆசிரியரிடத்துக்
கொடுத்தல், 15 நாள்கள் கழித்துத் திரும்பக் கடிதம் பெற்று
மாணவர்களிடத்து ஒப்படைத்தல் போன்ற செய்திகள் கடிதங்களின் அவசியத்தைக்
கற்றுத்தருகின்றது.
சனிக்கிழமை
அன்று பள்ளி வேலை நாளென்றால் விளையாட்டிற்கே முக்கியத்துவம் தந்துள்ளார் ஆசிரியர். இறுதியாகச் சுஸ்கித் பள்ளிக்குச் செல்கிறாள் என்ற கதையைக்கூறி தான் எப்படி
இருக்க வேண்டும் என்ற சூழலையும், தன் விருப்பத்தையும் தெளிவுபடுத்துவது அருமை.
வகுப்பறையில்
மாற்றத்தையும், மாணவர்களிடத்து அக்கறையும், அன்பையும் வெளிபடுத்த, கற்றலை, கற்பித்தலை இனிமையானதாக மாற்றவும், சமூகப்பிரக்ஞை கொண்டுள்ள அனைத்து ஆசிரியரும் இந்நூலைப் படித்துப்
பயன்பெறுவது காலத்தின் கட்டாயம் என்றே குறிப்பிடலாம். இப்படியொரு நூலை எழுதிய சசிகலா அவர்களுக்கும், சிறப்பான முறையில் வெளியிட்ட ஃபுக்ஸ் பார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்) பதிப்பகத்திற்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்….
இது எங்கள் வகுப்பறை
ஆசிரியர் – வே.சசிகலா உதயகுமார்
பதிப்பகம் - புக்ஸ் ஃபார் சில்ரன் ,சென்னை
முதல்பதிப்பு - செப்டம்பர் 2017
விலை ரூ.160, பக்கம் - 184
மயிலம் இளமுருகு
கைப்பேசி –
9600270331
புத்தகம் பேசுது- நவம்பர் 2017
0 Response to "காலத்தின் கட்டாய வாசிப்பு - இது எங்கள் வகுப்பறை - வே.சசிகலா உதயகுமார், நூல் மதிப்புரை- மயிலம் இளமுருகு"
Post a Comment