நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதை குறைப்பதற்கு இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அரசின் மானியம்:
இந்தியாவில் சுய தொழில் தொடங்குதல் போன்றவற்றிற்கு அரசு சார்பில் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மக்கள் அலுவலகங்களில் வேலை செய்வதை காட்டிலும் தொழில் முனைவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெளிவாக கூறியுள்ளார்.
நடப்பாண்டில் இந்த திட்டத்தின் கீழ் 325 திட்டங்களுக்கு ரூ.1.85 கோடி மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்த 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். பொது பிரிவினை சேர்ந்த இளைஞர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 மற்றும் சிறப்பு பிரிவினருக்கு 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் சிறப்பு பிரிவில் அடங்குவார்கள்.
இதற்கு விண்ணப்பிக்க கோவை மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருப்பது முக்கியமான ஒன்று. மேலும் அவர்களின் குடும்ப வருமான உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இளைஞர்கள் உற்பத்தி தொழில்கள் அதிகபட்சம் ரூ.15 லட்சம் முதலீட்டில், சேவை, வியாபார தொழில்களை அதிகபட்சம் ரூ.5 லட்சம் முதலீட்டில் தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அரசு தரப்பில் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்வமுள்ளவர்கள் www.msmetamilnadu.tn.gov.in/uyegp.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 89255 33932, 89255 33936 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
0 Response to "இளைஞர்கள் தொழில் தொடங்க அரசு மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!"
Post a Comment