"நரை நீக்கும் நல்ல மருந்து"
கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்தபோது ( வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாமல் இருந்து உயிர் நீத்தல்) "தன் நண்பர் பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் ஒதுக்க வேண்டும் " என கூறினார். தான் நன்றாக வாழ்ந்த காலத்தில் வராவிட்டாலும், தனக்கு துன்பம் நேர்ந்த காலத்தில் தன் நண்பர் பிசிராந்தையார் வருவார் எனக் கருதினார்.
முகம் கூட காணாத இவர்களின் நட்பை அறிந்த ஊரார் பிசிராந்தையாராவது வருவதாவது என மனதில் எண்ணிக் கொண்டனர். எல்லோரும் வியக்கும் வண்ணம் கோப்பெருஞ் சோழனைக் காண வந்தார் பிசிராந்தையார்.
பிசிராந்தையாரைக் கண்ட ஊர்மக்கள், அவரின் தோற்றம் கண்டு வியந்து போனார்கள். " புலவரே! நான் சிறுவயது முதலே தங்களைப் பற்றி என் தந்தையார் கூறக் கேட்டிருக்கிறேன். தாங்கள் மிகவும் வயதானவராக இருப்பீர்கள் என்று எண்ணியிருந்தேன். தாங்களோ மிகவும் இளமையாக இருக்கின்றீர்களே , அது எப்படி?" என்று பிசிராந்தையாரைப் பார்த்து வியந்து கேட்டான் கூட்டத்தில் ஒருவன்.
தான் நரையின்றி வாழக் காரணம் என்னவென்பதை ஒரு பாடல் மூலம் விளக்கினார் பிசிராந்தையார்.
" யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின் '
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர் ;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க ; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே "( புற நானூறு - 191)
முதுமைப் பருவம் எய்தியும் நான் நரையில்லாமல் இருப்பது
எப்படி என்று வினவுகிறீர்கள். அதற்குக்
காரணம், என் சுற்றமும் சூழலும்தான்.
என் மனைவியும் மக்களும் மாண்புடையவர்கள். நிறைகுடம் போல நிரம்பிய உள்ளம் கொண்டவர்கள்.
என் தம்பியாரும் என்னைப் போலவே இருக்கின்றனர். என் ஏவலர்கள் என் இயல்பினை
உணர்ந்தவர்கள். நான் வாழும் நாட்டை ஆளும் அரசன் அறம் அல்லாத செயல்களைச்
செய்யாமல் செம்மையான ஆட்சி செய்து
மக்களைக் காப்பாற்றுகிறான்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக என்னைச் சுற்றி இருப்பவர்கள்
அனைவரும் அறிவு நிறைந்த சான்றோர்கள். அவர்கள் பெற்ற அறிவைப் பகட்டாக்கிக்
காட்டாமல் அடக்கமாக வைத்துக் கொண்டு கோட்பாட்டுடன் வாழ்பவர்கள்.
அதனால், எனக்குக் கவலை என்பதே இல்லை.
கவலை ஏதும் இல்லாததால் எனக்கு நரை தோன்றவில்லை " என்றார் பிசிராந்தையார்.
நாட்டில் பலர் நரைத்த முடியோடு ஏன் இருக்கிறார்கள்
என்பதற்கான காரணம் இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும். நமக்கு வாய்த்தது அவ்வளவுதான்
.
சோறு தண்ணீர் பார்க்காதவர்கள் இங்கு பலருண்டு.
சோதனைகளைப் பார்க்காதவர்கள் இங்கு யாரும் இல்லை.
தலையில் நரை தோன்றாமல் இருக்க இயற்கை ( மூலிகை ) மருந்தோ, செயற்கை மருந்தோ இனி தேவையில்லை.
" நரையின்றி வாழ
நன்மக்களோடு வாழ்க "
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 134. நரை நீக்கும் நல்ல மருந்து ஆ.தி.பகலன்"
Post a Comment