"உண்டால் அம்ம இவ்வுலகம் "
இந்த உலகம் இயங்குவதற்கு, ஆயிரம் காரணங்களை அறிவியல்
உலகம் சொல்லலாம். ஆனால்,
தமிழர்கள் கண்ட மெய்ஞ்ஞான அடிப்படையில் பார்த்தால்
இரண்டே இரண்டு காரணங்கள்தான் உள்ளன.
ஒன்று, ஐம்பெரும்பூதங்களால் இயங்குகிறது.
மற்றொன்று, ஐம்புலன்களையும் அடக்கி வாழும் சான்றோர்களால் இயங்குகிறது.
அப்படிப்பட்ட சான்றோர்களின் பண்பு நலன்கள் குறித்து, கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய பாடல் ஒன்றைப் பார்ப்போம்.
" உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் ; அயர்விலர் ;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே. " ( புறநானூறு - 182)
தேவர்களின் உணவாகிய அமிழ்தமே கிடைத்தாலும் அதை தனியாக உண்ணமாட்டார்கள். அமிழ்தத்தை உண்டால் நீண்டநாள் உயிர் வாழ முடியும் . இருப்பினும் அதைத் தான் மட்டும் உண்ணாமல் பிறருக்கும் கொடுத்து உண்பர்.
யார் மீதும் வெறுப்பைக் காட்ட மாட்டார்கள். அஞ்சத் தகுந்த பழிபாவங்களுக்கு அஞ்சி வாழ்வார்கள். ஒரு போதும் சோம்பலாக இருக்கமாட்டார்கள் . சுறுசுறுப்புடன் வாழ்வார்கள்.
புகழ் கிடைப்பதாக இருந்தால் தன் உயிரையும் கொடுப்பர். பழி என்றால் உலகம் முழுமையும் கிடைப்பதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எதற்கும் மனம் தளர மாட்டார்கள்.
இத்தகைய பெருமை பொருந்திய குணங்களை உடையவர்களான இவர்கள் ஒருபோதும் தமக்கு என்று முயற்சித்து வாழாமல் பிறருக்காக முயற்சித்து நன்மை செய்து வாழ்வார்கள்.
இத்தகைய சான்றோர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான் இவ்வுலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
" என் வாழ்க்கை
எல்லோர்க்குமானது " என்று எண்ணுகிற
சான்றோர்கள் இருக்கும்வரை இந்த உலகத்தின் இயக்கம் இருக்கும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 136. உண்டால் அம்ம இவ்வுலகம் ஆ.தி.பகலன்"
Post a Comment