"அம்பிகாபதி - அமராவதி "
தமிழுலகம் காலத்தால் மறக்க இயலாத துன்பியல் காதல் கதை .
குலோத்துங்கச் சோழன் மகள் ' அமராவதி '
'கவிச்சக்கரவர்த்தி ' கம்பரின் மகன் ' அம்பிகாபதி.
அந்தக் காலத்தில் கல்வி கற்க ஆசிரியரின் வீட்டுக்குச்
செல்வது வழக்கம். கல்வியில் பெரியவரான கம்பரிடம் தன் மகள் அமராவதியைக் கல்வி கற்க
அனுப்பி வைத்தான் சோழ மன்னன். கல்வி கற்க நாள்தோறும் கம்பர் வீட்டுக்குச் சென்று
வந்தாள் அமராவதி.
கம்பர் வீட்டில் இல்லாத நாள்களில் கம்பரின் மகன்
அம்பிகாபதிதான் அமராவதிக்கு கல்வி கற்றுக் கொடுப்பான். கம்பன் வீட்டுக்
கட்டுத்தறியே கவிபாடும்போது கம்பன் மகன் கவிபாடாமல் இருப்பானா? . ஆம். அவன் பாடிய கவி அமராவதியை ஈர்த்தது.
அமராவதியின் கட்டழகு அம்பிகாபதியை ஈர்த்தது. இறுதியில், இருவரையும் காதல்
ஈர்த்தது. இருவரின் காதல் கதை கவியரசுக்கும் ( கம்பர்) , புவியரசுக்கும் (
சோழன்) சென்று சேர்ந்தது.
தங்கள் காதலுக்கு ஒரு வழி பிறக்கும் என்று
அம்பிகாபதியும் , அமராவதியும் நினைத்தார்கள். ஆனால், இவர்கள் காதலை ஒரு வழி செய்து விட வேண்டும்
என்று நினைத்தார் ஒட்டக் கூத்தர். கம்பரின் வளர்ச்சியைக் கண்டு பொறாமையில் இருந்த
ஒட்டக்கூத்தர், தன் வஞ்சம் தீர்க்க
இதுதான் வழி என்று எண்ணி மன்னன் மனதில் நஞ்சை விதைத்தார். அமராவதியின் காதலைக்
கொல்ல நினைத்தான் மன்னன். அமராவதியின்
காதலனைக் கொல்ல நினைத்தார் ஒட்டக் கூத்தர். அம்பிகாபதி மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தூண்டினார் ஒட்டக்கூத்தர்.
மனக்குழப்பத்தில் இருந்த மன்னன், ஒட்டக்கூத்தரிடம் ஆலோசனை பெற்றான். புலவர்கள் கூடிய அரசவையில்
சிற்றின்பம் தவிர்த்து (புறப்பொருளில்)
நூறு பாடல்களை அம்பிகாபதி தொடர்ந்து பாடிவிட்டால் அமராவதியை மணக்கலாம்.
தவறினால் மரண தண்டனை அளிக்கப்படும் என்று அறிவித்தான் சோழன். மகனின் மீது இருந்த
நம்பிக்கையால் இந்தப் போட்டிக்கு ஒப்புதல் தந்தார் கம்பர்.
பாடலை எண்ணிக்கொண்டே பாடுவது தடுமாற்றத்தைக் கொடுக்கும்
என்பதால், பாடலைத் தான் எண்ணுவதாகவும்
நூறு பாடல்கள் நிறைவுற்றதும் உங்கள் கண்ணெதிரில்
தோன்றுவேன் என்றும் அம்பிகாபதியிடம் கூறினாள் அமராவதி. அம்பிகாபதியும்
அதற்கு ஒப்புக் கொண்டான்.
ஒரு வழியாக போட்டி தொடங்குகிறது. திரை மறைவில்
அமர்ந்திருந்த அமராவதி, தான் வைத்திருந்த நூறு மலர்களில் ஒவ்வொரு பாடலின்போதும் ஒரு மலரை எடுத்து
கலத்தில் போட்டு பாடல்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தினாள். அம்பிகாபதி நூறு
பாடல்களை பாடியதும் காதலும், காதலனும் வெற்றி பெற்றதாக எண்ணி மகிழ்ச்சியோடு திரையை
விலக்கி அம்பிகாபதி முன் தோன்றினாள். நிறைமதி ( அமராவதி) யைக் கண்டதும் போட்டி
நிறைவுற்றதாக நினைத்த அம்பிகாபதி தன் காதலி அமராவதியைப் போற்றிப் பாடினான்.
அம்பிகாபதி வெற்றி பெற்றதாக எண்ணி அவையோர் ஆரவாரம்
செய்தனர்.
அம்பிகாபதி தோல்வியுற்றதாக அறிவித்தார் ஒட்டக்கூத்தர்.
போட்டியின் தொடக்கத்தில் பாடிய முதல் பாடல் காப்புப் பாடல் ( கடவுளுக்கானது) ஆகும்.
அது கணக்கில் வராது. மாறாக, கடைசி பாடல் அமராவதியின் அழகினைப் (
சிற்றின்பம் ) போற்றிப் பாடியது விதிமுறை மீறிய செயல் என்று விளக்கமளித்தார்
ஒட்டக்கூத்தார்.
விதிமுறை பற்றிய புரிதல் இன்றி செயல்பட்டதைக் கண்டு
அம்பிகாபதியும் , அமராவதியும் துடித்துப் போனார்கள். கலங்கி நின்ற கம்பனோ, சோழனிடம்
கருணையை எதிர்பார்த்தான்.
சோழனிடமிருந்து கருணை வரவில்லை.
கட்டளை மட்டுமே வந்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி அம்பிகாபதி கொலை
களத்துக்குக் கொண்டு செல்லப்பட்டான். மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.அம்பிகாபதியின்
உயிரற்ற உடலைக் கண்ட அமராவதி தன் உயிரைத்
துறந்தாள். மண்ணுலகில் இணைந்து வாழ வேண்டியவர்கள், தாங்கள் செய்த சிறு பிழையால் விண்ணுலகில்
இணைந்து வாழ சென்றுவிட்டனர்.
இந்தத் துன்பியல் முடிவுக்கு சோழனும், ஒட்டக்கூத்தரும்
மட்டும் காரணம் இல்லை. காதலர்களின் பக்குவமின்மையே காரணம். அமராவதி காப்புப்
பாடலைக் கணக்கில் சேர்க்காமல்
இருந்திருந்தால், அவள் காதல்
அம்பிகாபதியுடன் சேர்த்திருக்கும்.
தமிழ்ச் சமுதாயம்,
ஒருபோதும் காதலை எதிர்த்ததில்லை.
பக்குவமற்ற மனதில் தோன்றும் காதலைத்தான் காலந்தோறும் எதிர்த்து வருகிறது.
பருவம் அடைந்த வயதில் வருவது எல்லாம் காதல் இல்லை!
பக்குவம் அடைந்த வயதில் வருவதுதான்
உண்மையானக் காதல்!
உண்மைக் காதல்
காலத்தை வெல்லும்!
உணர்ச்சியால் வரும் காதல்
காதலர்களைக் கொல்லும்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583 ) .
0 Response to "தமிழ் அறிவோம்! 137. அம்பிகாபதி - அமராவதி ஆ.தி.பகலன்"
Post a Comment