" தலைவணங்காத் தமிழ்ப்புலமை "
தன் மகள் அமராவதி இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாத சோழ
மன்னன், கம்பரை நாடு கடத்த ஆணையிட்டான். இதனால் சோழ மன்னனை வெறுத்து தாமாகவே
நாட்டைவிட்டு வெளியேற நினைத்தார் கம்பர். சோழ நாட்டைவிட்டு வெளியேறும் முன்
சோழனைப் பார்த்து கம்பர் பாடிய பாடல் ஒன்றை இங்குக் காண்போம்.
" மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?
உன்னைஅறிந் தோதமிழை ஓதினேன்? - என்னை
விரைந்துஏற்றுக் கொள்ளாத வேந்துஉண்டோ? உண்டோ
குரங்குஏற்றுக் கொள்ளாத கொம்பு?
(தனிப்பாடல் திரட்டு-கம்பர் பாடல்- 182)
"இவ்வுலகில் மன்னன் என்பவன் நீ ஒருவன்
மட்டுமோ? வளத்தை உடைய நாடு என்பது உன்
நாடு மட்டுமோ? உன்னை அறிந்த பின்னர்தான்
நான் தமிழைக் கற்றேனோ? குரங்கானது தாவி
வரும்போது அதனைத் தாங்கிக் கொள்ளாத மரக்கிளை உண்டோ?
அதைப் போன்றே என் தமிழை அறிந்து என்னை விரைவிலே ஏற்றுக்கொண்டு பாராட்டாத மன்னர்
இவ்வுலகில் உண்டோ? இல்லை. எனவே, எந்த
நாட்டிற்கு வேண்டுமென்றாலும் நான் செல்வேன். நீ ஆதரிப்பாய் என்று எண்ணியா நான்
தமிழைக் கற்றேன்? என் தமிழ் எங்கும் என்னை
வாழ வைக்கும் " என்று சொல்லிவிட்டு சோழ நாட்டை விட்டு நீங்கினார் கம்பர்.
" நெத்தியடி " என்பார்களே அது இதுதான். தன்னை வெளியேற்ற நினைத்த சோழ மன்னனை
வெறுப்பேற்றும் வகையில் பாடிய இப்பாடலை, கம்பர் பாடிய பாடல்களுள் மிகச் சிறந்த
பாடல் எனலாம். தமிழ்ப்புலமை யாருக்கும் தலைவணங்காது என்பதை எல்லோர்க்கும்
எடுத்துக் காட்டினார் கம்பர்.
சோழநாட்டை விட்டு வெளியேறிய கம்பர், காளையார் கோவில் அருகே உள்ள முடிக்கரை
நிலக்கிழாரைச் சந்திக்க எண்ணினார் . அதற்காக நாட்டரசன் கோட்டை வழியே உள்ள ஒத்தையடி
பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த
சிறுவர்களிடம் தம்பிகளா இந்த வழி எங்கே போகிறது என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவர்கள் இந்த வழி எங்கும்
போகாது. அது இங்கேதான் இருக்கும்.
நாம்தான் அந்த வழியில் போக வேண்டும்" என்றனர்.
"ஐயா! நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று தெளிவாக
சொல்லுங்கள். நாங்கள் சரியான வழியைச்
சொல்கிறோம் " என்று சிறுவர்கள் கேட்டனர். " நான் முடிக்கரை போக
வேண்டும் " என்றார் கம்பர். உடனே சிறுவர்கள் " அடிக்கரையைப் பற்றிப்
போனால் முடிக்கரை செல்லலாம் " என்றனர். கம்பருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
உடனே கம்பர் " நான் பெரிய கவி என நினைத்துக் கொண்டிருந்தேன் . நீங்கள் என்னை
விட திறமைசாலிகளாக இருக்கிறீர்கள் என்று கூறி மீண்டும் வழியைக் கேட்டார். அதற்கு அந்த சிறுவர்கள் " இந்தக்
கண்மாயின் அடிக்கரையில் இருந்து கண்மாய் முடியும்வரை சென்றால் நீங்கள் கேட்கும்
முடிக்கரை வரும் " என்றனர்.
ஆடு மேய்க்கும் சிறுவர்களிடம் உள்ள புத்திக்கூர்மையைக்
கண்ட கம்பர் இந்த மண்ணில் தமிழ் மணம் கமழ்கிறது. தன் இறுதிக் காலத்தைத் தமிழ்
அறிந்த இந்த ஊரிலேயே கழிக்கலாம் என்று எண்ணி நாட்டரசன் கோட்டையிலேயே தங்கி
தமிழ்ப்பணி ஆற்றத் தொடங்கினார்.
தங்கள் ஊரில்
" கவிச்சக்கரவர்த்தி " கம்பர் வாழ்வதை அப்பகுதி மக்கள் பெருமையாக எண்ணினர்.
தன் மகனின் இறப்பை ஏற்றுக் கொள்ள இயலாத கம்பரால்
உணவையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதனால் உடல்நலம் குன்றியது. ஒருநாள்
மண்ணுலகை விட்டு விண்ணுலகு சென்றார்.
கம்பரின் பெருமையைப் போற்றும் வகையில்
கம்பரின் திருவுடலைப் புதைத்த இடத்தில் கல் ஒன்றினை நட்டு அப்பகுதி
மக்கள் நாள்தோறும் வணங்கி வந்தனர். கம்பர்
மறைந்து 150 ஆண்டுகள் கழித்து கம்பர்
மறைந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டு இன்றளவும் அப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு
வருகிறது.
அப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பர் கோவில்
உள்ள இடத்தில் மண் எடுத்து குழந்தைகள் நாக்கில் வைப்பது வழக்கமாக உள்ளது. அப்படிச்
செய்தால், குழந்தை நல்ல தமிழாற்றலுடனும், மிகுந்த தமிழ் அறிவுடனும் வளரும் என்பது
காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கையாக உள்ளது. பாட்டரசன் ( கம்பர்) வாழ்ந்த நாட்டரசன் கோட்டை என்று தங்கள் ஊரை
இன்றும் பெருமையோடு அடையாளப்
படுத்துகிறார்கள் அவ்வூர் மக்கள்.
"இந்தச் சோழன் இல்லையேல் உனக்கு சோறு
இல்லை " என்று எண்ணிய சோழனைத் தூக்கி எறிந்துவிட்டு, தான் வாழும் இடத்திலேயே சோற்றை மட்டுமல்ல சொர்க்கத்தைக் கொண்டு வந்தார் கம்பர். இந்த
உலகத்தில் எந்தவொரு கவிஞனுக்கும் வாழும் போதும் , வாழ்ந்த பின்னும் இப்படி ஒரு
பெருமை கிடைக்கவில்லை .
தமிழறிந்த புலவர்கள் யாருக்கும் தலைவணங்க மாட்டார்கள்.
காரணம் ஏனென்று தெரியுமா? இந்த உலகமே தன்னைத் தூக்கி எறிந்தாலும், தன்னைத் தூக்கி நிறுத்த தமிழ் இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் .
கம்பர் வாழ்வில் அதுதான் நடந்தது. தமிழ் கற்றவர்கள்
வாழ்விலும் அதுதான் நடக்கும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை.
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 138. தலைவணங்காத் தமிழ்ப்புலமை ஆ.தி.பகலன் "
Post a Comment