அது
என்ன!
புலியைப்
பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை.?
ஒருநாள்
பூனை ஒன்று காட்டுக்குப் போனது. பூனை காட்டுக்குள் நுழைந்ததும் எல்லா விலங்குகளும்
மிரட்சியுடன் பார்த்தன. அஞ்சி ஓடின. பூனைக்கு ஒரே
பூரிப்பு. அடடா! " நமக்கு எவ்வளவு மரியாதை " என்று எண்ணியது. பின்னால்
ஏதோ உறுமும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தது. புலி ஒன்று நடந்து வந்து கொண்டிருந்தது.
அப்போதுதான் பூனைக்கு ஓர் உண்மை புரிந்தது . எல்லா விலங்குகளும் மிரண்டதும் அஞ்சி ஒடியதும்
புலியைக் கண்டுதான் என்று!
எல்லா
விலங்கும் புலியைக் கண்டு அஞ்சுகிறது. புலியைப் போலவே தோற்றம் கொண்டிருந்தாலும் ஏன்
நம்மைப் பார்த்து எந்த விலங்கும் அஞ்சுவது இல்லை?
நமக்கு என்ன குறைச்சல்? அறிவில்லையா? அழகில்லையா? வேறு என்ன காரணமாக இருக்கும்? என்று அறை எடுத்து
( Room போட்டு) அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தது. அப்போது தான் ஓர் உண்மை பூனைக்குப்
புரிந்தது. என்னதான் நாம் தோற்றத்தில் புலியைப் போல இருந்தாலும் புலியிடம் இருக்கும்
ஒன்று நம்மிடம் இல்லை என்பதை ஆய்வின் முடிவில் கண்டறிந்தது. அது யாதெனில் புலியின்
உடலில் இருக்கும் கோடுகள் (வரிகள்) . புலிகளிடம்
இருக்கும் வரிகளைப் பார்த்துத்தான் இந்த விலங்குகள் எல்லாம் அஞ்சுகின்றன. அந்த
வரிகள் நம் உடலில் இல்லாததால் தான் இந்த விலங்குகள் நம்மைக் கண்டு கொள்வதில்லை என்ற
உலக மகா உண்மையைக் கண்டுபிடித்தது.
உடலில்
வரிகளை வர வைத்துக் கொண்டால் நாமும் புலியாகி விடலாம் என்று மனக்கணக்குப் போட்டது.
உடனே காட்டை விட்டு வெளியே வந்து ஒரு வீட்டுப் பக்கம் சென்றது. அங்கே அடுப்பில் எரிந்து
கொண்டிருந்த விறகுக் கட்டையை எடுத்து உடல் முழுவதும் கோடு போட்டுக் கொண்டது. ஆனால்
அங்கு கோடுகள் உண்டாகவில்லை. தழும்புகள் தான்
உண்டானது. பூனையின் உடலோ வெந்து போனது. உள்ளமோ
நொந்து போனது.
புலி
ஆகவேண்டும் என்று எண்ணிய பூனைக்கு உடல் புண்ணானதுதான் மிச்சம்.
புலி
புலிதான்
பூனை
பூனைதான்.
பூனை
ஒருபோதும் புலியாகாது .
நாம்
யாராகவும் ஆக முடியாது. வேறு யாராகவும் ஆக வேண்டும் என்று நினைக்கவும் கூடாது.
ஏனெனில்
நாம்
நாம்தான்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! – 14 - புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை.? ஆ.தி.பகலன் "
Post a Comment