தமிழ் அறிவோம்! 140. ஆட்டனத்தி - ஆதிமந்தி ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 140. ஆட்டனத்தி - ஆதிமந்தி ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!   140.    ஆட்டனத்தி - ஆதிமந்தி  ஆ.தி.பகலன்

 


"ஆட்டனத்தி - ஆதிமந்தி "
 

கடையெழு வள்ளல்களின்  வள்ளல்தன்மையைக் கண்டு போற்றியது  தமிழுலகம். வள்ளல்கள் அனைவருமே ஆண்களாகவே இருக்கிறார்கள். ஏன் ஒரு பெண் கூட இல்லை? 

பொதுவாக,  பெண்கள் எல்லோருமே வள்ளல்கள்தான். தன் கணவனுக்காக தன் குழந்தைகளுக்காக , தன் குடும்பத்திற்காக தங்கள் வாழ்க்கையையே கொடையாக கொடுத்து வாழ்கிறார்கள். " மங்கையர் இல்லையேல் இந்த மானுடம் இல்லை " . பெண்களின் கொடைத்தன்மைக்கு ஈடாக மண்ணுலகையும், விண்ணுலகையும் கொடுத்தாலும் அது ஈடாகாது. 

கடையெழு வள்ளல்கள எல்லோருமே பொன்னையும்,  பொருளையும்தான் அள்ளிக் கொடுத்தார்கள். ஆனால், சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு பெண் வள்ளல் தன் உயிரின் உயிராய் இருந்தவனையே கொடையாய் கொடுத்துவிட்டு , இறுதியில் தன் உயிரையும் கொடுத்துள்ளாள்.  அந்த பெண் வள்ளலின் பெயர் மருதி. அவள் வரலாற்றை இப்போது  காண்போம். 

சோழவேந்தன் கரிகால் பெருவளத்தான் மகள் ஆதிமந்தி.

சேரர்குல அரசர் குலத்தைச் சேர்ந்தவன் ஆட்டனத்தி ( ஆட்டன்அத்தி). இவன் நீச்சல் நடன வீரனாவான்.  கரிகால் பெருவளத்தான் முன்பு தன் கலைத்திறமையைக் காட்டி பெயரும் புகழும் பெற விரும்பினான். அதற்காக நீர்நிலைகளில் பயிற்சி மேற்கொண்டு வந்தான். அச்சமயம் அவனைப் பார்த்த ஆதிமந்தி அவன்பால்  காதல்கொண்டாள். 

காவிரி ஆற்றங்கரையில் இருந்த கழார் என்னும் ஊரில் இருந்த நீர்த்துறையில் ஆட்டனத்திக்கும் காவிரி என்ற பெண்ணுக்கும் இடையே நீச்சல் நடனப் போட்டி நடைபெற்றது. இந்த நீச்சல் நடனம் சோழன் கரிகாலன் முன்னிலையில் நடைபெற்றது. தன் காதலனின் நீச்சல் நடனத்தைக் காண ஆதிமந்தியும் அருகில் இருந்தாள் . 

நடனப் போட்டி நடந்து கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றுவெள்ளம் காவிரியை ( நடனப் பெண்) ஈர்த்தபோது அவள் ஆட்டனத்தியைப் பிடித்துக் கொண்டாள். வெள்ளம் இருவரையும் இழுத்துக் கொண்டு சென்று விட்டது. ஆற்றுவெள்ளத்தில் மாண்டு போனாள் காவிரி. ஆட்டனத்தி மயக்க நிலையில்  கரை ஒதுங்கிக் கிடந்தான். மருதி என்பவள் அவன் நிலையைக்  கண்டு வேண்டிய மருத்துவ உதவி செய்து அவன் உயிரைக் காப்பாற்றினாள். மருதி என்பவள் பெற்றோரை இழந்தவள். மீனவ குலப் பெண். தன்னந்தனியாக வசித்து வருபவள். ஆட்டனத்தியைக் கண்டு காதல் கொண்டாள்.  தனக்கு வாழ்க்கை கொடுத்த மருதிக்கு வாழ்க்கை கொடுக்க நினைத்த ஆட்டனத்தி மருதியோடு இணைந்து வாழ்ந்து வந்தான். 

இதற்கிடையில், கழார் ஊரில் நீச்சல் போட்டியைக் காணவந்த அனைவரும் ஆட்டனத்தி வெள்ளத்தில் மூழ்கி இறந்திருப்பான் என்று நம்பினர். இதைக் கேட்டதும் ஆதிமந்தி மயங்கி விழுந்தாள். தன் வீரர்களை அனுப்பி ஆற்றின் கரையோரமாகத் தேடச் சொன்னான் சோழன் கரிகாலன், மயக்கம் தெளிந்து எழுந்தாள் ஆதிமந்தி. பின் காதல் மயக்கத்திற்குச் சென்ற ஆதிமந்தி  தன் காதலன் இறந்திருக்க மாட்டான் என்று எண்ணி ஆற்றின் கரையோரம் சென்று தானே காதலனைத் தேட முடிவு செய்தாள். 

" கச்சினன் கழலினன் தேம்தார்  மார்பினன்

வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல் 

சுரியலம் பொருநரைக் கண்டீரோ? என

ஆதிமந்தி பேதுற்று இனைய " ( அகநானூறு - 76) 

கச்சினையும் கழலினையும் தேன் ஒழுகும் மாலையணிந்த மார்பினையும் உடையவனும் , பலவகை மலர்களால் தொடுக்கப்பட்டு  விளங்கிய அழகமைந்த மாலையை உடையவனும் , சுருண்ட கூந்தலையுடைய கூத்தனாகிய ஆட்டனத்தியைக் கண்டீரோ? என்று கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் கண்ணீர் மல்க கேட்டாள் ஆதிமந்தி. 

இறுதியாக, தன் காதலன் மருதியோடு வாழ்ந்து வருவதை அறிந்து , அவளிடம் சென்று   கல்லும் கரையும் வண்ணம் தன் காதல் கதையைச் சொல்லிக் கண்களில் நீர் வழிய தன் காதலனைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு  கெஞ்சினாள். இதைக்கேட்டு மனமிரங்கிய மருதி மறுப்பேதும் சொல்லாமல் ஆட்டனத்தியை ஆதிமந்திக்குக்  கொடையாகக்  கொடுத்தாள்.  அவர்கள் சென்ற பிறகு,  தன் வாழ்க்கையில் இனி ஒன்றும் இல்லை என்று உணர்ந்து கொண்ட மருதி கடலுள் பாய்ந்து உயிர்நீத்தாள். 

ஆதிமந்தியிடம் ஆட்டனத்தியை ஒப்படைத்துவிட்டு கடலில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட மருதி போல் நாமும் புகழ் பெறலாம். போகலாமா?  என்று தலைவி தோழியிடம் கூறுவதாகக் கூறி  மருதியைப் போற்றிப் பாடுகிறது அகநானூறு ( பாடல் - 222) . 

" மன்னன் கரிகால் வளவன்மகள் , வஞ்சிக்கோன்

தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று

'கன்னவில் தோளாயோ ' என்னக் கடல்வந்து

முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு

பொன்னங் கொடி போல போதந்தாள் "

என்று உயர் காதலைப் போற்றுகிறது சிலப்பதிகாரம். ஆனால்,  அந்த உயர் காதலுக்கு உயிர் கொடுத்த மருதியைப் போற்ற மறந்தது ஏனோ? 

காலந்தோறும் போற்றப்பட வேண்டிய பெண்வள்ளல் மருதி.

மருதியைப் போற்றுவோம்!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 

0 Response to "தமிழ் அறிவோம்! 140. ஆட்டனத்தி - ஆதிமந்தி ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel