தமிழ் அறிவோம்! 141. " கோல் உயரக் கோன் உயர்வான் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 141. " கோல் உயரக் கோன் உயர்வான் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! 141.   " கோல் உயரக் கோன் உயர்வான்    ஆ.தி.பகலன்

 


"கோல் உயரக் கோன் உயர்வான் "
 

இரண்டாம் குலோத்துங்க சோழன் முடிசூட்டு விழாவிற்கு ஔவையார் சென்றிருந்தார். புலவர் பலரும் குலோத்துங்க சோழனை வாழ்த்திப் பாடினர். அப்போது மன்னனை வாழ்த்திப்பாட ஔவையார் எழுந்தார். மன்னரும், அவையோரும் ஔவையார் என்ன சொல்லி வாழ்த்தப் போகிறார் என்று ஆவலுடன் இருந்தனர். 

" வரப்பு உயர  நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான் " 

"வேளாண்மை செய்யக்கூடிய நிலத்தில் வரப்பை உயர்த்தினால் வயலில் நீர் அதிகமாகத் தங்கும். நீர் அதிகமாக தங்கினால் நெல் விளைச்சல் உயரும்.  நெல் விளைச்சல் உயர உயர குடிமக்களின் வாழ்க்கை நிலை உயரும். குடிமக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தால் நாட்டில் செங்கோல் வழுவாத நல்லாட்சி நடக்கும். அப்படி சிறந்த நல்லாட்சியைத் தருகின்ற மன்னனின் புகழ் எங்கும் எப்போதும் உயர்ந்து நிற்கும். அதுபோல,  உன்னுடைய புகழும் உயர்ந்து நிற்க வேண்டும்"  என்று மன்னனை  வாழ்த்தினார் ஔவையார்.

இதன்மூலம் உழவுத் தொழிலின் சிறப்பை மன்னனுக்கு உணர்த்தினார். " சீரைத் தேடின் ஏரைத் தேடு " என்று சொல்லி  உலகிற்கும் உணர்த்தினார். 

இதே பொருள்கொண்ட பாடல் ஒன்று சிறுபஞ்சமூலம் நூலில் இடம்பெற்றுள்ளது. அதனையும் இங்குக் காண்போம். 

" வார்சான்ற கூந்தல்! வரம்புஉயர வைகலும்

நீர்சான்ற உயரவே, நெல்உயரும் - சீர்சான்ற

தாவாக் குடிஉயர, தாங்கருஞ்சீர் கோஉயர்தல்

ஓவாது உரைக்கும் உரை. ( சிறுபஞ்சமூலம் - 44) 

நீண்ட கூந்தலை உடைய பெண்ணே! 

1. நெல் வயலில் வரப்பு உயருமானால், நாள்தோறும் நீர் உயரும்.

2. நீர் மிகுந்து உயருமானால், நெல் விளைச்சலின் அளவு உயரும்.

3. நெல் விளைச்சலின் அளவு உயருமானால் , அதனைப் பயிர் செய்த குடி உயரும் .

4. குடிமக்களின் வாழ்க்கை நிலை  உயர்ந்தால் , அரசன் உயர்வான்.

5. அரசன் உயர்ந்தால்,  உலகம் செழிக்கும் .

இதுவே இடையீடின்றி உலகோர் உரைக்கும் உரை அல்லவா ?  என்கிறது சிறுபஞ்சமூலம். 

ஔவையார் பாடலும்,  சிறுபஞ்சமூலம் பாடலும் உணர்த்துகிற செய்தி ஒன்றே ஒன்றுதான். " வயலைக் காப்பவனே வையகத்தைக் காப்பான் " 

உலகைக் காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், முதலில்  உழவர்களைத்தான் காக்க வேண்டும். 

"உலகினைக் காக்க

உழவனைக் காப்போம்!"

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 

0 Response to "தமிழ் அறிவோம்! 141. " கோல் உயரக் கோன் உயர்வான் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel