"பட்டமரம் வெட்டும்முன் பத்து மரம் நடுமின் "
தன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு வீழ்வதற்கு தயாராக
இருக்கும் உலர்ந்து போன மரத்தையே பட்டமரம் என்பார்கள். அப்படிப்பட்ட பட்டமரத்தை வெட்டுவதாக
இருந்தாலும் , பத்து மரங்களை நட்டபின்தான் அந்த பட்டமரத்தை வெட்ட வேண்டும். இந்த
உலகில் ஒரு மரத்தின் எண்ணிக்கை குறைகிறது என்றால் பத்து மரங்களின் எண்ணிக்கை கூட
வேண்டும். அதுதான் தமிழர்களின் உயர் சிந்தனை.
மரங்களை ஒரு உயிராகக் கூட கருதாத இந்த உலகில், மரங்களை
கடவுளாக்கி சுற்றி சுற்றி வந்து அதை வணங்கினார்கள் தமிழர்கள். தாங்கள்
வழிபாடு செய்யும் கடவுள் இருக்கும்
இடமெல்லாம் ஓர் மரத்தை நட்டு அதையும் கடவுளாக்கினார்கள். மரங்களைக் கடவுளாய் எண்ணி
தமிழர்கள் போற்றியதால்தான் இம்மண்ணில் எண்ணற்ற மரங்களின் எண்ணிக்கை குறையாமல்
இருக்கிறது. இல்லையேல், பல மரங்களை
மண்ணோடு மண்ணாக்கி இருக்கும் இந்த மனித
சமுதாயம்.
மரத்தை தன் உடன்பிறந்த தங்கையாக எண்ணும் உள்ளத்தை
உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது சங்கப் பாடல் ஒன்று.
தலைவியைச் சந்திக்க வரும் தலைவனிடம், " தலைவி உன்னை
இங்கு சந்திக்க மாட்டாள் " என்கிறாள் தோழி.
" ஏன் என்று ஏக்கத்தோடு கேட்கிறான் " தலைவன். அதற்கு தோழி சொல்லும் பதிலை இப்பாடல் வழி
பார்ப்போம்.
" விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர்இசை கடுப்ப,
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்,
இறைபடி நீழல் பிறவுமார் உளவே! ( நற்றிணை - 172)
பாணர்கள் பாடும் மெல்லிய இசைபோல் வலம்புரி சங்கு
சத்தமிடுகிற கடற்கரையின் ( நெய்தல் நிலத்தின்)
தலைவனே!
சின்ன வயதில் நாங்கள் தோழிகளோடு சேர்ந்து விளையாடும்
போது அங்கே ஒரு புன்னை விதையைத் தவறவிட்டோம். அது தானாக முளைத்துச் செடியாக
மாறியது.
அதன்பிறகு நாங்கள் அந்தச் செடிக்குத் தேன் கலந்த
இனிப்பான பாலை ஊற்றி வளர்த்தோம். இப்போது
அது பெரிய மரமாகிவிட்டது.
இதைப் பார்த்த என் தாய்க்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டானது.
" இந்த மரம் உங்களை விட அழகானது "
என்று புகழ்ந்து பேசினாள். " நீங்கள் இருவரும் இந்த மரத்தை
வளர்த்ததால் இது உங்களுடைய தங்கை " என்றாள். "நாங்கள் தங்கையாக
எண்ணுகின்ற இந்தப் புன்னை மரத்தின் கீழேதான் நேற்று நீ உன் தலைவியோடு உட்கார்ந்து
கொண்டு பேசியிருக்கிறாய். நீ பேசும் காதல் பேச்சையெல்லாம் தங்கை கேட்கிறாளே"
என்று உன் தலைவிக்கு வெட்கமாகிவிட்டது. யாராவது தம் தங்கையின் முன் காதலித்து
மகிழ்வார்களா?
ஆகவே, இனிமேல்
இந்த மரநிழலில் உட்காராதீர்கள். நீங்கள் பேசவும், பழகவும் வேறு பல மரங்கள் இருக்கிறது. அந்த மரங்களின்
நிழலின்கீழ் உட்கார்ந்து பேசுங்கள் "
என்று தலைவனிடம் தோழி கூறினாள்.
இப்பாடல்வழி சங்க காலத்தில் மரங்களையும் உறவாக, உயிராக
போற்றியமை புலனாகிறது.
இன்று உலக சுற்றுச் சூழல் நாள் ( ஜுன் - 5)
மரக்கன்றுகள் பல
நடுவோம். உலக சுற்றுச் சூழல் நாளினை
கொண்டாடுவோம்.
உங்களுக்குப் பிறந்த நாளா?
கேக் வெட்டாதீர்கள் .
ஒரு குழி வெட்டுங்கள்
அதில் ஒரு மரக்கன்றை நடுங்கள்!
அந்த மரம் வளர்வதைப் போல
உங்கள் வாழ்க்கை வளரும்!
இவண்
ஆ.தி.பகலன் ,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 142. பட்டமரம் வெட்டும்முன் பத்து மரம் நடுமின் ஆ.தி.பகலன் "
Post a Comment