தமிழ் அறிவோம்! 143. கனாக்கண்டேன் தோழி ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 143. கனாக்கண்டேன் தோழி ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! 143.  கனாக்கண்டேன் தோழி   ஆ.தி.பகலன்

 


"கனாக்கண்டேன் தோழி "
 

அன்பால் ஆண்டவனை ஆண்டாள் . அறிவால் தமிழை ஆண்டாள் . அதனால்தான் , கோதை என்னும் இயற்பெயர் பெற்றவள் " ஆண்டாள் " என்னும் காரணப் பெயர் பெற்றாள்.  கண்ணனையும்,  கன்னித் தமிழையும் ஆண்ட , ஆண்டாளின் வரலாற்றை இங்குக் காண்போம் . 

சிறுவயதில் ஒரு குழந்தைக்கு வீடும், நாடும்  எதைக் கற்பிக்கிறதோ,  அதையே நம்பும். அதையே கடைப்பிடிக்கும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ஆண்டாள்.

  தனக்குத் தெரிந்த சமயம் சார்ந்த கருத்துகளை எல்லாம், ஆண்டாளுக்கு  இளம் வயதிலேயே சொல்லிக் கொடுத்தார் பெரியாழ்வார். இதனால் கண்ணன் மீது அளவற்ற பற்று கொண்டாள்.  இறைப்பற்று நாளடைவில் இதயப்பற்று ஆனது.  கண்ணனையே மணம் செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்க்கத் தூண்டியது.

தன்னை கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துக் கொண்டு மனமுருகி பாட ஆரம்பித்தாள்   ஆண்டாள். 

ஆண்டாள் மணப்பருவம் அடைந்தவுடன் மற்ற  எவரையும் மணந்து கொள்ளும் எண்ணம் இன்றித் திருவரங்கப் பெருமாளுக்கே தான் உரியவள் எனக் கூறிவந்தாள். அவளுக்கு மணம் முடிக்க பலவழிகளில் முயன்றும் பெரியாழ்வாரால் முடியவில்லை. பாவை நோன்பிருந்து 30 பாசுரங்களில் திருப்பாவை பாடினாள். கண்ணன் மீது கொண்ட காதலைப் போற்றும் விதமாக 143 பாசுரங்களில் நாச்சியார் திருமொழியைப் பாடினாள். ஆண்டாளை நாச்சியார் என்றும் போற்றுவர். 

"வாரணம் ஆயிரம் சூழ வலம்செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம்எங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான் " (நாச்சியார் திருமொழி)

 ஆயிரம் யானைகள் (வாரணம்)  சூழ்ந்து வர என் தலைவன் நாராயணன் வருகின்றான் என்ற செய்தியைக் கேட்டதும் , அவனை எதிர்கொண்டு அழைக்க , பொன்னால் செய்த குடங்களில் புனித நீரை நிறைத்துக் கொண்டு ஊரார் சென்றனர். எல்லாத் திசைகளிலும் உள்ள வீடுவாசல்களில் தோரணம் நாட்டினார்கள். கண்ணன் மணக்கோலம் கொண்டு மணப்பந்தலுக்கு வரும் அழகை கனவில் கண்டதாக  தோழியிடம் சொல்லி பூரிக்கிறாள் ஆண்டாள். 

"  மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தல்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்துஎன்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான் " ( நாச்சியார் திருமொழி) 

மத்தளம் கொட்ட, வரிகளுடன் கூடிய சங்குகள் முழங்க முத்து மாலைகளால் ஒப்பனை செய்யப்பட்ட பந்தலின் கீழ் என் தலைவனான நம்பி (நம்பி - ஆண்களில் சிறந்தவன்)  மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாக தோழியிடம் சொல்லி உவகை கொள்கிறாள் ஆண்டாள். 

"கண்ணன் என் காதலன் " என்ற நினைப்போடு  ஆண்டாள் பாடிய அனைத்துப் பாடல்களுமே அன்னைத் தமிழுக்குக் கிடைத்த  வரமாகும். 

இந்தக் கால இளைஞனிடம் சென்று ஒரு பெண் ' 143 ' என்ற எண்ணைச்    சொன்னால்,  அதைக் கேட்டவுடனே அந்த இளைஞன் இமயத்தின் உயரத்தையும் தாண்டி மிதப்பான்.  காரணம் என்னவென்று தெரியுமா? 

ஆங்கிலத்தில் காதலை வெளிப்படுத்தும் சொற்றொடரான

 ' I LOVE YOU ' என்பதன் எண் வடிவம்தான் ' 143' 

I (1) LOVE (  4 ) YOU (3)  

அதாவது, ஆங்கில எழுத்துகளின் கூட்டுத்தொகைதான் இந்த " 143"  இப்போது புரிகிறதா? ஆண்டாளுக்கும் , இந்த ஆங்கிலச் சொற்றொடர்களின் கூட்டுத்தொகைக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

தொடர்பு இருக்கிறது. 

கண்ணனை மனமுருகி காதலித்து ஆண்டாள் பாடியதுதான் " நாச்சியார் திருமொழி '  .அந்த  நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 143.

ஆங்கிலம் உருவாவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காதலின் குறியீட்டு எண்ணைக் கணக்கில் கொண்டு கணக்காக  பாடல் பாடியிருக்கிறாள்  ஆண்டாள். 

ஆக மொத்தம் தமிழர்கள் கண்டறிந்த கண்டுபிடிப்புகளை வைத்தே காலத்தை ஓட்டி வருகிறார்கள் இந்த உலக மக்கள். 

ஆண்டாள் கண்ணனை நினைத்து கனாக்கண்டது எல்லாம் நிறைவேறியது. காரணம், அவள் காதலில் உண்மை இருந்தது.

அதுபோலவே ,

நாம் எண்ணுகின்ற எண்ணத்தில் உண்மை இருந்தால்,  ஆண்டவனையும் அடையலாம். உலகில் உள்ள அனைத்தையும் அடையலாம். நாம் காணும்  கனவுகள் எல்லாம் கைகூடும்  என்பதையே ஆண்டாளின் வாழ்க்கை நமக்கு வகுப்பெடுக்கிறது.

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்,

( அலைப்பேசி - 9965414583) .



0 Response to "தமிழ் அறிவோம்! 143. கனாக்கண்டேன் தோழி ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel