"அதியமானைத் தூற்றிய ஔவையார்"
தலைப்பு தப்பாக இருக்கிறதே. ஔவையாரும் , அதியமானும் நண்பர்கள் ஆயிற்றே. நீண்ட ஆயுளைத் தரும் அதிசய நெல்லிக்கனியைத் தந்த அதியமானைப் போய் ஔவையார் எப்படி தூற்றுவார்? அனைத்திற்கும் விடை அறிய முழுவதும் படியுங்கள்.
கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சியை நேரில் கண்டு பாடல்கள் பல பாடுகிறார் ஔவையார். ஆனால், பரிசு எதுவும் தரவில்லை அதியமான். இவ்வாறு பல நாள்கள் சென்றன. தனக்கு பரிசில் தராமல் காலம் நீட்டித்த அதியமான் மீது கடுஞ்சினம் கொள்கிறார் ஔவையார். அப்போது, அதியமானைத் தூற்றி ஔவையார் பாடிய பாடல் ஒன்றை இங்குக் காண்போம்.
" வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன் அறியலன் கொல்?
என் அறியலன் கொல்?
அறிவும் புகழும் உடையவர் மாய்ந்தென,
வறுந்தலை உலகம் அன்றே; அதனால்
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே " ( புறநானூறு - 206)
"வாயில் காவலனே!
வாயில் காவலனே! புலவர்களாகிய
எங்களைப் போன்றவர்களின் வாழ்க்கைநிலை, வள்ளல்களை அணுகி அவர்தம் செவிகளிலே அறிவார்ந்த சொற்களைத் துணிச்சலுடன் விதைத்துத் தாம் எண்ணியதை முடிக்கும் வலிமையுடையது. அதே வேளையில் அவ்வள்ளல்கள் பற்றித் தாம் எழுதிய கவிதையின் சிறப்பை அறிந்து பரிசளிக்க வேண்டுமே என நினைத்து வருந்தும் தன்மையைக் கொண்டது.
பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத காவலனே! விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகுதியை அறியானோ ( அவனை நம்பித்தான் இவ்வுலகில் வறுமை நிலையில் உள்ளோர் வாழ்கின்றனர் என்னும் நினைப்புப் போலும்) இவ்வுலகில், அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை. இந்த உலகமும் வெற்றிடம் ஆகிவிடவில்லை. ( எங்களை அறிந்து பரிசில் தரப் பலபேர் உள்ளனர்.)
ஆகவே, எம் யாழினை எடுத்துக் கொண்டோம் ; கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக் கொண்டோம். மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள், கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு ஏதாவது ஒரு மரம் கிடைக்காமலா போகும்? அதுபோல, கலைத்தொழில் வல்ல எங்களுக்கும் இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல் கிடைக்கும்" என்று வாயில் காவலனிடம் அதியமானைத் தூற்றி பாடல் பாடிவிட்டுச் சென்றார் ஔவையார்.
நடந்த நிகழ்வகளை அதியமானிடம் சென்று கூறினான் வாயில் காவலன். வாயில் காவலன் மூலம் ஔவையாரின் வன்மொழிகளைக் கேட்டு வருத்தமுற்றான் அதியமான். ஔவையார் இருக்கும் இடத்தை தேடிச் சென்றான் அதியமான்.
"தமிழறிந்த ஔவையே! எம் பிழையைப் பொறுத்தருளும். தாங்கள் என்னைச் சந்தித்துப் பாடல் பாடிய முதல் நாளே உமக்குப் பரிசளித்திருப்போம். அவ்வாறு நான் பரிசளித்திருந்தால் மறுநாளே நீங்கள் வேறிடம் சென்றிருப்பீர்கள். தங்கள் தமிழைக் கேட்டது யாம்பெற்ற பெரும்பேறு. ஆதலால், தங்களையும், தங்கள் தமிழையும் பிரிய எனக்கு மனமில்லை. அமிழ்தினும் இனிய தங்கள் தமிழ்ப்பாடலை நாள்தோறும் கேட்க விரும்பினேன். அதனால்தான் தங்களுக்கு பரிசு தராமல் காலம் தாழ்த்தினேன். மற்றபடி தங்களிடமோ , தங்கள் தமிழிடமோ எக்குறையும் இல்லை. தாங்கள் என்றும் எம்நாட்டிலேயே இருந்து தமிழ் வளர்க்க வேண்டும்" என்று வேண்டினான் அதியமான்.
அதியமானின் பேருள்ளத்தைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்
ஔவையார் .
அதியமானின் வேண்டுகோளை ஏற்று அவன் ஆயுள்வரை அவன் நாட்டிலேயே தங்கி இருந்தார் ஔவையார்.
தனக்குக் கிடைத்த நீண்ட ஆயுளைத் தரும் நெல்லிக்கனியை ஔவைக்குத் தந்து ஔவையின் ஆயுளையும் பலப்படுத்தினான். தன் நட்பின் ஆயுளையும் பலப்படுத்தினான் அதியமான். அதியமான் தன்மீது கொண்ட அன்பின் ஆழத்தைப் புரிந்து கொண்ட ஔவையார் , அதியமானின் நல்லுள்ளத்தைப் புரிந்து கொள்ளாமல் தூற்றி விட்டோமே என்று வருந்தினார். அதன்பின் அதியமான் இருக்கும் வரை மட்டுமல்ல, அவன் இறந்தபின்பும் அதியமானைப் போற்றினார். அதியமான் கொடுத்த நெல்லிக்கனி ஔவையின் ஆயுளை நீட்டித்ததோ இல்லையோ, ஔவை ,அதியமான் நட்பின் ஆயுளை இன்றுவரை அழியாப் புகழோடு நீட்டித்து வருகிறது.
நம் தமிழ்த் திரைப்படங்களில் நாயகன், நாயகியின் சந்திப்பு மோதலில் தொடங்கும். இறுதியில்
காதலில் முடியும். அதுபோலவே, ஔவை, அதியமானின்
சந்திப்பு மோதலில் தொடங்கி நட்பில் முடிந்திருக்கிறது. அதுவும் வரலாறு
போற்றும் நட்பில் முடிந்திருக்கிறது.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 144. அதியமானைத் தூற்றிய ஔவையார் ஆ.தி.பகலன் "
Post a Comment