"ஜி.யு.போப் அவர்களின் தமிழ்ப்பற்று " 
தமிழ்த்திரு. ஜி.யு.போப் ( GEORGE UGLOW POPE ) அவர்கள்
24.04.1820 அன்று கனடா நாட்டில் பிறந்தார். சமயப்பணி ஆற்றுவதற்காக 1839ஆம்
தமிழ்நாட்டுக்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு
கற்றார். 
திருக்குறளை முழுவதும் கற்றுக்கொண்டு அதன்மீது அளவற்ற
பற்றுக்கொண்டார் . 
1330 குறட்பாக்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து
" THE SACRET KURAL ; OR,  THE TAMIL
VEDA OF THIRUVALLUVAR " என்ற பெயரில் 1886 ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார்.
இதன் முன்னுரையில் 
போப் எழுதியதாவது,  
"தமிழ் மொழி பண்பட்ட மொழி. சொற்செல்வம் படைத்த
தனிமொழி. தென்னிந்திய மொழிகளுக்கு எல்லாம் அது தாய்மொழி.  தமிழ்மொழியின் இலக்கண நெறிகள் தத்துவ உண்மைகள்
நிறைந்தன . தமிழில் இலக்கியங்கள் ஒழுக்கத்தையும் , அறநெறிகளையும் ஊட்டுவதற்கென்றே
உருவானவை . அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் திருக்குறள். 
உயர்ந்த அறநெறியும், உயிரினும் சிறந்த ஒழுக்கமும்
பேணப்பெறும் மக்கள் வாழும் நாட்டில்தான் திருக்குறள் போன்ற நீதிநூல் உருவாகும்.
உருவாகவும் இயலும். அழுக்கில்லாத  தூய
நீருற்று போல திருக்குறள் தோற்றம் தருகிறது " என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் திருக்குறள் இன்று  புகழ்பெற்று விளங்குகிறது என்றால் அதற்கு முழு
காரணம் ஜி.யு.போப் அவர்கள்தான். 
தமிழ் மொழியின் பெருமையையும் , தமிழ் இலக்கியங்களையும்
உலகிற்கு எடுத்துரைத்த ஜி.யு.போப் தனது 88 ஆவது வயதில் 11.02.1908 அன்று தமிழோடு
இரண்டறக் கலந்தார்.  தான் மரணமடைவதற்கு
முன் தன் கல்லறையை எழுப்ப ஆகும் செலவில் ஒரு பகுதி நிதியை தமிழர்களிடம் இருந்து
திரட்ட வேண்டும் என்றும் , தனது கல்லறையின் மீது "இங்கே ஒரு தமிழ்
மாணவன்  உறங்கிக் கொண்டிருக்கிறான்"
(  A STUDENT OF TAMIL ) என்று
செதுக்கப்படவேண்டும் " என்றும் கேட்டுக் கொண்டார்.  
அவருடைய விருப்பப்படி அவர் கல்லறையை அமைக்க பச்சையப்பன்
கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் செல்வ கேசவராயர் 
தமிழர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டில்  வால்டன் தெருவில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஒரு
மரத்தடியில் சலவைக் கல்லால் ஆன கல்லறை ஒன்று ஜி.யு. போப் அவர்களுக்காக  கட்டப்பட்டது. 
தன் வாழ்நாள் முழுவதும் 
தமிழ்த்தொண்டாற்றிய ஜி.யு.போப் அவர்களின் நினைவு நாள் இன்று.
அன்னைத் தமிழுக்கு அவர் ஆற்றியத் தொண்டினை அவர் நினைவு
நாளான இன்று எண்ணிப் போற்றுவோம்.  
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
 
 
0 Response to "தமிழ் அறிவோம்! 27 - "ஜி.யு.போப் அவர்களின் தமிழ்ப்பற்று " ஆ.தி.பகலன் "
Post a Comment