உலகிலேயே உயர்ந்த தொழில் எது தெரியுமா?
1.ஆட்சிப்பணி ( IAS)
2.காவல் பணி (IPS & POLICE)
3. இராணுவம் ( ARMY)
4.மருத்துவர் ( DOCTOR)
5. பொறியாளர் ( ENGINEER)
6. ஆசிரியர் ( TEACHER)
7. வழக்குரைஞர் ( ADV0CATE)
நாம் சிறுவயதில் இருக்கும் போது " நீ படித்து
என்னவாகப் போகிறாய்? " என்று எல்லோரும் நம்மிடம் கேட்பார்கள் . நாம் மேற்கண்ட
பணிகளில் ஏதோ ஒன்றினை சொல்லுவோம். அதிலும்
மருத்துவர், பொறியாளர் என்றால் நம் முகம் முழுவதும் புன்னகை தேசமாகிவிடும்.
காரணம், இந்த சமூகம் நம்மை அப்படித்தான் காலம் காலமாக
வளர்த்து வருகிறது.
உண்மை அதுவல்ல!
உலகில் ஆயிரம் தொழில்கள் இருந்தாலும் என்றுமே உயர்ந்த தொழில் உழவுத்தொழில்.
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
( குறள்
- 1033)
உழவு செய்து
அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே இந்த உலகில் உரிமையோடு வாழ்கின்றவர் .
மற்றவர் எல்லோருமே உழுபவரைத் தொழுது
உண்டு பின் செல்கின்றவரே ஆவர்.
ஒருவனிடம்
என்னதான் பணம், பதவி, ஆட்சி, அதிகாரம் இருந்தாலும் அவன் உண்ணும் உணவுக்கு உழவனிடம்
கையேந்தி நிற்கத்தான் வேண்டும்.
'கொடுப்பவனை கொடையாளி' என்போம்.
வாங்குபவனை யாசகன் (பிச்சைக்காரன் ) என்போம்.
உண்ணும் உணவுக்காக உலகமே கையேந்தி நிற்பது உழவனிடம்தான்.
" சீரைத் தேடின் ஏரைத் தேடு "
( கொன்றை வேந்தன் - 29)
'புகழோடு வாழ
விரும்பினால் உழவுத் தொழிலில் ஈடுபட வேண்டும் ' என்கிறார் தமிழ் மூதாட்டி ஔவையார்.
உழவுத்தொழில் என்பது பொருள் தேடும் தொழிலன்று.
புகழ் தேடும் தொழில்.
உலகைக் காக்கும் உன்னதத் தொழில்.
உலகைக் காப்பவன்தான் உண்மையான கடவுள் என்றால், இங்கு "உழவனே உண்மையான கடவுள் " .
அறிவுடைய சான்றோர்களே!
இனியாவது வளரும் தலைமுறைக்கு
" ஏர்த்தொழில் பழகு " என்று கற்றுக்கொடுங்கள்!
அதனால்
உழவுதொழில் செழிக்கும்.
உலகமும் தழைக்கும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! – 32 உலகிலேயே உயர்ந்த தொழில் எது தெரியுமா? ஆ.தி.பகலன்"
Post a Comment