கடலாடு விழா /
முந்நீர் விழா (மாசி மகம்)
மாசி மாதம் மக(ம்) விண்மீன் (நட்சத்திரம்) நாளில் தோன்றும் முழுநிலவு (பௌர்ணமி) அன்று மாசிமகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் தான் பிரம்மன் உலகை படைத்தார் எனவும் ( உலகத்திற்கே பிறந்தநாள்) அன்றைய தினத்தில் தெய்வச் சிலைகளை நீர்நிலை (கடல், ஆறு,குளம்) களில் நீராட்டி வழிபட வேண்டும் எனவும் ஆன்மீகம் சொல்கிறது.
சரி! அறிவியல் என்ன சொல்கிறது. அதுவும் தமிழன் கண்ட அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் .
இயற்கையோடு இயைந்த வாழ்வு தமிழர் வாழ்வு.
ஐம்பெரும் பூதங்களையே (நீர், நிலம், காற்று, நெருப்பு,
ஆகாயம்) வழிபட்டனர்.
கார்த்திகை அன்று ஒளியை ( நெருப்பு) வணங்குவதைப் போல நீரை வணங்கும் விழாவாகவே மக்கள் இதைக் கொண்டாடினர்.
முந்நீர் விழா :
ஆற்று நீரும், ஊற்று நீரும், மழை நீரும் ஆகிய முந்நீரும் கலக்கும் இடமான கடலை 'முந்நீர் ' என்று வழங்குவர். கடலே உலகின் முதல் நீராகும். அந்த முந்நீரைக் கொண்டாடவே 'முந்நீர் விழா' என்ற ஒரு விழாவை காலம் காலமாகக் கொண்டாடி வருகிறது நம் தமிழ்ச்சமூகம்.
" எங்கோ, வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே "
(புறநானூறு - 09)
தனது செம்மையான நேர்மையான ஆட்சியில் செய்த சுத்தத்
தங்கத்தை ( செம்பொன்) கூத்து நடிப்பவர்க்கும் , நடனக் கலைஞர்களுக்கும் வாரி
வழங்கியவன் உன் முன்னோனான நெடியோன்.
நிலத்திற்கும், ஆற்று நீர், ஊற்று நீருக்கும் முன் தோன்றிய கடல் (முந்நீர்) என்னும் தெய்வத்திற்கு அவன் விழா நடத்தினான். நல்ல நீரையுடைய பஃறுளி என்னும் ஆற்று மணலினும் பல ஆண்டு காலம் எங்கள் அரசன் குடுமி நீடுழி வாழியவே! என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டிப் பாடியிருக்கிறார் புலவர் நெட்டிமையார்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குமரிக்கண்டத்தில் ஓடிய ஆற்றின் பெயர் தான் பஃறுளி. அந்த பஃறுளி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கடலையே தெய்வமாகக் கொண்டு அதற்கு முந்நீர் விழா எடுத்தான் பாண்டிய மன்னன் நெடியோன். இந்த செய்தியின் வாயிலாக முந்நீர் விழா (கடலைத் தெய்வமாகப் போற்றுதல் ) பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருவதை அறியலாம்.
கடலுக்கு சென்று நீரை வணங்க இயலாதவர்கள் அருகில் உள்ள
ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு சென்று நீரை வணங்கினர். நீராடி மகிழ்ந்தனர் .
கடலில் நீராடல், ஆற்றில் நீராடல் , குளத்தில் நீராடல் ஆகிய மூன்று வகையான நீராடல்களையும் 'முந்நீர் விழா ' என்றும் கூறுவர்.
கடலாடு விழா :
முந்நீர் என்பதை முதல் நீரான கடல்நீரையே குறிக்கும்.
முந்நீர் விழாவை 'கடலாடுதல் விழா ' என்று கூறுவர்.
கடலில் சென்று நீராடி மகிழ்வதையே "கடலாடுதல் விழா " என்று கூறுவர். இந்த செய்தியை அழகாக காட்டுகிறது சிலப்பதிகாரத்தில் உள்ள கடலாடு காதை.
உலகில் முதல் உயிரினம் தோன்றியதே நீரில் (கடல்) தான். உலக உயிர்களுக்கு நீரே ஆதாரம். அதனால் தான் திருவள்ளுவர் தன் குறட்பாவில்
" நீரின்று அமையாது உலகு "
என்று போற்றினார். நீரை
வள்ளுவன் வழியில் வையகம் போற்றவே இந்த முந்நீர் விழா கொண்டாடப்பட்டது.
மாசி மகம் :
நீரைக் கடவுளாக கொண்டாட ஆரம்பிக்கப்பட்ட விழா இன்று
கடவுளை நீரில் நீராட்டிக் கொண்டாடும் விழாவாக மாறி விட்டது.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! - 40 கடலாடு விழா / முந்நீர் விழா (மாசி மகம்) ஆ.தி.பகலன்"
Post a Comment