ஓருமுறை கம்பர் ஔவையாரிடம் "ஒரு விடுகதை சொல்கிறேன். விடை
சொல்லுங்கள்" எனக் கூறி ஒரு விடுகதையைக் கூறினார்.
"ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி "
பொருள் :: ஒருகால் கொண்டதடி
நான்கு இலைகளைப் பந்தல் போல கொண்டதடி.
அது என்ன? என்பதே கேள்வி.
கேள்வியின் இறுதியில் "டி" என்று முடிவதால், தன்னை
"வாடி,போடி " என்ற முறையில் மரியாதைக் குறைவாக கம்பர் பேசிவிட்டதாக ஔவையார்
நினைத்துக் கொண்டார்.
உடனே பொங்கி எழுந்த ஔவையார் விடுகதைக்கு விடை கூறுவது போல கம்பரைப்
பார்த்து ஒரு பாடல் பாடினார்.
"எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது. "
பொருள் ::
எட்டேகால் லட்சணமே - தமிழில் 8 என்பதன் குறியீடு "அவ"
. கால் என்பதன் குறியீடு "வ" . இதன் பொருள் ",அவ லட்சணமே "
எமனேறும் பரியே - இங்கே பரி என்பது வாகனத்தைக் குறிக்கிறது. அதாவது எமனின் வாகனம் "எருமை " . எனவே இது எருமையே
என்கிறது.
மட்டில் பெரியம்மை வாகனமே - பெரியம்மை என்பது மூதேவியைக் குறிக்கும்.
மூதேவியின் வாகனம் " கழுதை " . எனவே இது கழுதையே என்கிறது.
முட்டமேல் கூரையில்லா வீடே - தலை முட்டுமாறு மேலே கூரை இல்லாத
வீடு. அதாவது " குட்டிச்சுவரே "
குலராமன் தூதுவனே - இராமனுக்காக இராவணனிடம் தூது சென்றவன் அனுமன்.
அதாவது " குரங்கே "
ஆரையடா சொன்னாய் அது - நீ சொன்னது "ஆரைக்கீரையை "
தன்னை "டி " போட்டு சொன்னதற்காக
கம்பரைப் பார்த்து
அவலட்சணமே
எருமையே
கழுதையே
குட்டிச்சுவரே
குரங்கே
என்றெல்லாம் வன்தமிழில் வசை பாடிவிட்டு இறுதியில் (ஆரையடா)
"டா" போட்டு ("போடா, வாடா " என்பது போல்) பாடலை முடித்திருக்கிறார்
ஔவையார்.
வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வது என்பது எல்லாக் (கம்பர்)
காலத்திலும் நடந்துள்ளது .
இனிமேல் யாரையாவது திட்டுவதாக இருந்தால் ஔவையின் தமிழைக் கடன் வாங்கித் திட்டுங்கள்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! - 5 - ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி - எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே ஆ.தி.பகலன்"
Post a Comment