நஞ்சை / புஞ்சை நன்செய் / புன்செய் எது சரி?
வேளாண்மை செய்யப்படும் நிலங்களை அவற்றின் தரத்திற்கேற்ப நன்செய், புன்செய் என
இருவகையாகப் பிரித்தனர் நம் தமிழ்மக்கள்.
நன்மை ( சிறந்த)
+ செய் ( நிலம்) = நன்செய்.
"நன்செய் நிலம் " என்றால் சிறந்த நிலம் என்று
பொருள்.
ஆறு, ஏரி, குளம், கிணறு உள்ளிட்டவற்றில் உள்ள நீரை
வைத்து வேளாண்மை செய்யப் பயன்படும் நிலங்கள் அனைத்தும் 'நன்செய் ' நிலம் என்று
அழைக்கப்படும்.
நன்கு செய்யப்பட்ட ( பக்குவம் அடைந்த, சமப்படுத்தப்பட்ட ) நிலமே நன்செய் நிலம் ஆகும்.
இந்நிலங்கள் வரப்புகள் வழியே பிரிக்கப்பட்டு, நீர் பாசன
வாய்க்கால்கள் வழியே , தண்ணீர் பாய்ச்சவும் , அளவுக்கு அதிகமான உள்ள நீரை
வடிக்கவும் கூடியதாக இருக்கும்.
நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களான நெல், கரும்பு, வாழை
உள்ளிட்டவை இந்நிலத்தில் விளையும்.
நன்செய் நிலத்தில் ஆண்டுக்கு மூன்று போகம் வரை பயிர்
செய்யலாம்.
புன்மை + செய் = புன்செய்.
'புன்மை ' என்ற சொல்லுக்கு சிறுமை, இழிவு, குற்றம் என்று
பொருளாகும்.
'புன்செய் ' நிலம் என்றால் குற்றமுள்ள ( குறைபாடுகள்
உள்ள) நிலம் என்று பொருள். அதாவது, காய்ந்து கட்டாந்தரையாகி விளைச்சலுக்கு
பயன்படாத தரிசு நிலமே " புன்செய் " நிலமாகும்.
மழை நீரை ஆதாரமாகக் கொண்டது தான் " புன்செய் " நிலம். நீர்ப்பாய்ச்சலுக்கு ஆதாரம் இல்லாத
நிலப்பகுதியை " புன்செய் " என்று அழைத்தனர்.
இந்நிலத்தில் நீர் ஆதாரம் குறைவாகத் தேவைப்படும்
பயிர்கள் மட்டுமே விளையும்.
கம்பு. கேழ்வரகு, சோளம், காராமணி, தினை, சாமை, வரகு,
குதிரைவாலி , துவரை, கொள்ளு, வேர்க்கடலை உள்ளிட்ட சிறுதானியங்கள் , பயறு
வகைகள் மட்டுமே இந்நிலத்தில் விளையும்.
நல்ல சுவையான உணவு தானியங்களுக்கு " புன்மை "
என்று பட்டம் கட்டினர்.
உடலுக்கு பல்வேறு நன்மைகள் செய்யும் சிறுதானியங்களையே
" புன்செய் பயிர்கள் " என்று போற்றுகின்றனர்.
வான்கொடை நம்பிய " வானமாரிப் பயிர்கள் "
பொதுவாக புன்செய் நிலத்தை " வானம் பார்த்த பூமி
" என்றும், புன்செய் பயிர்களை மானாவாரிப் பயிர்கள் என்றும் அழைப்பர். எவ்வித நீர்ப்பாசன வசதியும் இல்லாமல் ,
மழைப்பொழிவை மட்டுமே நம்பி பயிரிடப்படுவதுதான் 'புன்செய் பயிர்கள் ' .
வானம் தரும் கொடையான மாரியை ( மழையை) மட்டுமே நம்பிப்
பயிரிடப்படுவதால் " வானமாரிப் பயிர்கள் " என்று அழைக்கப்பட்டன.
" வானமாரிப் பயிர்கள் " என்ற சொல்லாடலே
இலக்கணப் போலியாகி " மானவாரிப்
பயிர்கள்" என்று அழைக்கப்பட்டு பின் " மானாவாரிப் பயிர்கள் "
என்றாயின .
நன்செய், புன்செய் என்ற சொற்கள் நாளடைவில் மருவி நஞ்சை,
புஞ்சை என்றானது.
நன்செய், புன்செய் என்பதே சரியான சொற்கள் ஆகும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 70. நஞ்சை / புஞ்சை ஆ.தி.பகலன்"
Post a Comment