அரசு / அரசினர்
எது சரி?
அரசினர் மேனிலைப் பள்ளி
அரசினர் கலைக்கல்லூரி
அரசினர் பொது மருத்துவமனை
ஓமந்தூரார் அரசினர் தோட்டம்
போன்ற பெயர்ப் பலகைகளை பார்த்து இருப்பீர்கள். அவற்றில் உள்ள
'அரசினர்' உயர்திணை ஆகும். ஆனால் அச்சொல்லால் சுட்டப்படுகிற பொருள் 'அஃறிணை'
ஆகும் . 'அரசு ' என்னும் அஃறிணைக்கு உயர்வு அல்லது மரியாதை தருகின்ற 'அர்' விகுதி
தேவையில்லை .
அமைச்சர் - அமைச்சு + அர்
இங்கு அமைச்சு என்பது அஃறிணை . 'அர் ' விகுதியைச் சேர்க்கும் போது
அந்த அமைச்சில் வீற்றிருக்கின்ற உயர்திணையாளரைக் குறிக்கிறது.
ஆனால் அரசு என்னும் அஃறிணை அமைப்பை உயர்திணைக்கே உரிய உயர்வுப்
பன்மை விகுதியைச் சேர்த்து சொல்வது தேவையற்றது .
அரசு+இன்+அர் = அரசினர். இங்கு அரசு என்னும் சொல்லோடு 'இன்' என்னும்
இடைச்சொல்லையும் , 'அர்' என்னும் உயர்வுப் பன்மை விகுதியைச் சேர்த்து 'அரசினர்' என்று
சொல்வது தவறாகும்.
சங்கம் = ஒரு தனியார்
அமைப்பு.
சங்கத்தினர் = சங்கத்தைச் சார்ந்தவர்கள், உறுப்பினர்கள் .
அரசு = பொதுமக்களுக்கான
ஓர் அமைப்பு.
(அரசுப் பள்ளி - அரசு நடத்தும் பள்ளி)
அரசினர் = அரசை நடத்தும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழியர்கள்
. (அரசினர் பள்ளி - அரசை நடத்துபவர்கள் நடத்துகிறப் பள்ளி என்று பொருள்படும்)
அஃறிணை சொல்லுடன் 'அர்'
விகுதி சேர்ந்தால் அது மனிதரையே குறிக்க வேண்டும்.
அலுவல் +அர் - அலுவலர்
அரசு + அர் - அரசர்
ஆட்சி + அர் - ஆட்சியர்.
நடுவில் 'இன்' என்னும் இடைச்சொல் போட்டும், யகர உடம்படுமெய் போட்டும் புது சொல்லை உருவாக்கலாம்.
"இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் "
(திருப்பள்ளி எழுச்சி - 04)
வீணை +ய்+அர் = வீணையர் (வீணையை உடையவர்)
யாழ் +இன்+அர் = யாழினர் (யாழை உடையவர்கள்)
இப்படி 'அர்' விகுதி சேரும் இடம் எல்லாம் அது மக்களைச் சுட்டுகிறது.
ஆனால் 'அரசினர் ' என்பது மக்களைச் சுட்டுகிறதா? இல்லை. ஆகவே அது
பிழைச்சொல்.
'அரசு ' என்பதே சரி.
அரசு மேனிலைப்பள்ளி
அரசு பொது மருத்துவமனை
என்றே இனி எழுதுவோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! - 8 - அரசு / அரசினர் எது சரி? ஆ.தி.பகலன்"
Post a Comment