தமிழ்நாடு அரசு / தமிழ்நாட்டரசு எது சரி?
'தமிழ்நாடு ' என்பது ஒரு மாநிலம். அது அரசு ஆகாது.
"தமிழ்நாட்டரசு" என்பதே சரி.
"தமிழ்நாட்டரசு " என்பது நான்காம் வேற்றுமையின் தொகைநிலைத் தொடராகும். தொகைநிலையை விரிநிலையாக்கினால் , தமிழ்நாட்டுக்கு அரசு ' என்று சரியான பொருளைத் தரும்.
சென்னையில் உள்ள ' தலைமைச்செயலகத்தில் ' தமிழ்நாடு அரசு ' என்று எப்போது எழுதப்பட்டதோ அன்றுமுதல் இந்தக் குழப்பம் நீடிக்கிறது.
"தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் " என்று பிழையற்ற தமிழில் ஒரு நிறுவனம் குறிப்பிடும்போது " தமிழ்நாடு அரசு " என்று ஏன் குறிப்பிட வேண்டும்?
இதற்கு இலக்கணம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
" நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள்
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே " ( நன்னூல் - 183)
நிலைமொழி ஈற்றில் டகரத்தையும் (ட்) , றகரத்தையும் (ற்) பற்றுக்கோடாகக் கொண்டுவரும் நெடில்தொடர்க் குற்றுகரமும், உயிர்த்தொடர் குற்றுகரமும் வருமொழியோடு புணரும்போது தாம் ஊர்ந்து வரும் ஒற்றுகள் இரட்டித்துப் புணரும்.
சான்று :
நாடு + பண் = நாட்டுப்பண்.
நாடு +அரசன் + கோட்டை = நாட்டரசன் கோட்டை.
ஏடு + சுவடி = ஏட்டுச்சுவடி.
வயிறு+ பசி = வயிற்றுப்பசி.
முரடு + காளை = முரட்டுக்காளை.
மேற்கண்ட விதியின்படியும், சான்றுகளின்படியும் பார்த்தால்,
தமிழ்நாடு + அரசு = தமிழ்நாட்டரசு என்று எழுதுவதே சரியாகும்.
இனியாவது,
தமிழ்நாட்டரசு ,
தமிழ்நாட்டரசுப் போக்குவரத்துக் கழகம் என்று பிழையின்றி எழுதுவோம்.
"தமிழ்நாடு அரசு " என்று சொல்வது இந்திய அரசை
ஆங்கிலத்தில் India government என்று சொல்வதற்கு ஒப்பானது.
Government of India
Indian government என்று சொல்வதுதானே சரியானது.
அதுபோலத்தான் 'தமிழ்நாட்டரசு' என்று சொல்வதே சரியானது.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 85. தமிழ்நாடு அரசு / தமிழ்நாட்டரசு - ஆ.தி.பகலன்"
Post a Comment