"உங்கள் வீட்டில் ரசம் வைக்க"
'ரசம் ' என்பது வடமொழிச் சொல். தமிழில் அதற்கு '
சாற்றமுது ' என்று பெயர்.
நம் தமிழ்நாட்டில் உள்ள சில சிற்றூர்களில்
மற்றவர்களைத் திட்டுவதற்காகவே பல புதிய சொற்றொடர்களைச் சொல்லாராய்ச்சி செய்து
கண்டுபிடிப்பார்கள். அதில் ஒன்றுதான் "உங்கள் வீட்டில் ரசம் வைக்க
" என்ற சொற்றொடர் .
பொதுவாக ரசம் என்பது நம் தமிழர்களின் விருந்தில்
சிறப்பு சேர்க்கும் உணவாகும். ரசம்தான் விருந்துக்கே அழகு என்பர்.
விருந்தில் எது நன்றாக இல்லையென்றாலும் ரசம் மட்டும் நன்றாக இருந்தாலே " ரசம்
அருமை, விருந்தும் அருமை. " என்று சொல்லி விருந்தைப் போற்றுவர்.
எப்படி மேல் நாடுகளில் வடிசாறு ( சூப் - Soup)
உணவுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களோ அப்படித்தான் நம் முன்னோர்கள்
ரசத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்.
காய்ச்சல், இருமல், தும்மல், உடல்சோர்வு, உடல்
களைப்பு, செரிமானப் கோளாறு, சத்துக் குறைபாடு, தொண்டை கமறல், வயிற்றுப்புண் என
எந்த நோயை எதிர்கொண்டாலும் அதற்கு கைமருந்து ரசம்தான்.
இப்படி பல சிறப்புகளைப் பெற்ற ரசத்தை வைத்து ஏன்
திட்டினார்கள்?
பொதுவாக யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை
என்றால் ரசம் வைத்து அதை சோற்றில் நன்றாக கலந்து பிசைந்து அவர்களுக்கு
கொடுப்பது வழக்கும். காரணம், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு
வாய் கசக்கும். வாந்தி வரும். எதை சாப்பிட்டாலும் செரிக்காது. அதனால் அவர்களுக்கு
ரசம் சோறு கொடுப்பார்கள். ரசம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை
மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. அதுவும் ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு
,வயிற்றில் உள்ள அமிலத்தை அதிகம் உற்பத்தி செய்ய தூண்டும் .இதனால் உணவுகள் எளிதில்
செரிமானம் ஆகிவிடும்.
உடல்நிலை சரியில்லாதவர்கள் உண்ணும் முதன்மை உணவாக
ரசம் விளங்கிறது.
"உங்கள் வீட்டில் ரசம் வைக்க " என்ற சொற்றொடர்
' உங்கள் வீட்டில் ரசம் மட்டுமே வைக்க வேண்டும் ' என்ற பொருளில் வருகிறது.
அதாவது,
"நீங்கள் ஏன் இன்னும் நன்றாக இருக்கிறீர்கள்.
உங்கள் குடும்பத்தினருக்கு எல்லா நோய்களும் வரட்டும். வெறும் ரசம் சோறு
மட்டுமே உண்ணும் நிலை உங்கள் குடும்பத்திற்கு ஏற்படட்டும்.
மொத்தத்தில் நீங்கள் நாசமாப் போங்க " என்று மிக
நாகரிகமாகத் திட்டுவதற்காக இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
" உங்கள் வீட்டில் ரசம் வைக்க "
"மற்றவர்களைத் திட்டும்போது கூட ஒரு ரசனையோடு
திட்டவேண்டும் " என்று திட்டம் தீட்டித் திட்டியிருக்கிறார்கள் நம்
தமிழ்மக்கள்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 87. உங்கள் வீட்டில் ரசம் வைக்க- ஆ.தி.பகலன்"
Post a Comment