
"எழுவாய்
செயப்படுபொருள்
பயனிலை "
எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற மூன்று உறுப்புகள் இணைந்துதான் தொடர் அமையும்.
எழுவாய் ( Subject) :
ஒரு தொடரின் முதல் பகுதியாக அமைவது எழுவாய் ஆகும்.
எழு+வாய் = எழுவாய்.
ஒரு சொற்றொடர் அமைய வாய் ( தொடக்கம்) போன்று அமைவதனால் எழுவாய் எனப்பட்டது .
ஒரு தொடர் தோன்றும் இடம் 'எழுவாய் ' எனப்படும். இது பெரும்பாலும் பெயர்ச்சொல்லாகவே அமையும்.
செயப்படுபொருள் ( Object) :
எழுவாய் செய்யும் தொழிலின் பயனை ஏற்பது எதுவோ அதுவே ' செயப்படுபொருள் ' எனப்படும். எழுவாய்க்கும், பயனிலைக்கும் இடையில்தான் செயப்படுபொருள் வரும். இதுவும் பெயர்ச்சொல்லாகவே அமையும்.
பயனிலை ( Verb) :
ஒரு எழுவாயிலிருந்து தோன்றும் தொடரின் பயனின் நிலையைத் தீர்மானிக்கும் சொல்லே பயனிலை ஆகும். பயனிலை என்பது வினைச்சொல் ஆகும். பயனிலை பெரும்பாலும் தொடரின் இறுதியில்தான் வரும்.
ஒரு தொடரில் எழுவாய், பயனிலை தவறாது இருக்கும். செயப்படுபொருள் இல்லாமலும் தொடர் அமைவது உண்டு.
தமிழரசி திருக்குறள் படித்தாள்.
தமிழரசி - எழுவாய்.
திருக்குறள் - செயப்படுபொருள்.
படித்தாள் - பயனிலை.
இவ்வாறு தன் மாணவர்களுக்கு விளக்கமாக பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பரிதிமாற் கலைஞர்.
ஆனால், ஒரு மாணவன் மட்டும் வகுப்பைக் கவனிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட பரிதிமாற் கலைஞர் அந்த மாணவனைப் பார்த்து, "வகுப்பைக் கவனிக்காத நீ உன் இடத்தில் இருந்து எழுவாய் ( எழுந்திடு ) உன்னால் ஏதும் செயப்படுபொருள் ( நான் சொல்வதை எதையும் உன் தலைக்குள் ஏற்றிக் கொள்ளப்போவது) இல்லை.
நீ இங்கிருந்தால் உனக்கோ பிறர்க்கோ யாதும் பயனிலை ( ஒரு பயனும் இல்லை) .
வகுப்பை விட்டு வெளியேறுக "என்றார்.
இலக்கணச் சொற்களான எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகியவற்றைத் தன்னைத் திட்டுவதற்கு ஆசிரியர் பயன்படுத்தியதைக் கண்டு அந்த மாணவன் வெட்கித் தலை குனிந்தான்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 88. எழுவாய், செயப்படுபொருள், பயனிலை - ஆ.தி.பகலன்"
Post a Comment